ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அதிமுக சார்பில் மாஜி அமைச்சர் கே.வி. ராமலிங்கமா? மாஜி எம்எல்ஏ தென்னரசா?
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துவிட்ட நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் அல்லது முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். இதையடுத்து நடந்து முடிந்த இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரின் போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த தொகுதிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மோதி பார்த்துடலாம்.. இறங்கி அடிக்க ரெடியான எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டி.. 4 காரணங்கள்!
தமாகவுக்கு வாய்ப்பு
இந்த நிலையில் இந்த தேர்தலில் யார் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. அதன்படி அதிமுக கூட்டணி சார்பில் ஏற்கெனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த தமாகவுக்கு இந்த வாய்ப்பு மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் அதிமுகவின் மூத்த தலைவர்களான ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமாக தலைவர் ஜி.கே. வாசனை சந்தித்து பேசினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவே போட்டியிடும் என முடிவு செய்ததாக ஜிகே வாசன் அறிவித்திருந்தார். அது போல் திமுக சார்பில் ஏற்கெனவே கடந்த முறை போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் கட்சியே இந்த முறையும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர்
அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் கே.வி. ராமலிங்கம் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. இவர் ஜூன் 2010 முதல் மே 2011 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அதன் பிறகு 2011 சடட்சபை தேர்தலில் இவர் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கே.வி. ராமலிங்கம்
அந்த தேர்தலில் வெற்றி பெற்ற கே.வி.ராமலிங்கம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2011 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பொதுப் பணித் துறை, விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத் துறையின் அமைச்சராக இருந்தார். அமைச்சரவை மாற்றத்தின் போது கே.வி. ராமலிங்கத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஏற்கெனவே இரு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் வென்ற கே.வி. ராமலிங்கத்திற்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கலாம் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அமைச்சர்
2011 ஆம் ஆண்டு ராமலிங்கம் அமைச்சரானவுடன் பலமுறை அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ்ந்தும் ராமலிங்கத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்து வந்தது. ஈரோடு மாவட்டத்தில் செல்வாக்குமிக்கவராக திகழ்ந்த செங்கோட்டையனின் செல்வாக்கு அப்போது சரிவு ஏற்பட்ட பிறகு ராமலிங்கத்தின் செல்வாக்கு உயர்ந்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கள்ளிவலசு கிராமத்தை சேர்ந்தவர் கே.வி. ராமலிங்கம், இவர் ஈரோடு மாவட்டச் செயலாளராக இருந்ததால் ஈரோட்டில் வீடு எடுத்து தங்கினார்.
அமைச்சர் பதவி பறிப்பு
இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு ராமலிங்கத்திடம் இருந்த பொதுப் பணித் துறை பறிக்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது வீட்டை அமைச்சராக இருந்த ராமலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் பறித்துக் கொண்டதாக ஈரோட்டை சேர்ந்த முத்துசாமி என்பவர் போலீஸிஸ் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து உளவுத் துறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொன்னது. அப்போது ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா பிஸியாக இருந்து வந்ததால் ராமலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின்னர் நாளிதழ்களில் விரிவாக செய்திகள் வெளியான நிலையில் அவரது மாவட்டச் செயலாளர் பதவியும் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வேட்பாளர்
அது போல் தென்னரசுவின் பெயரும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் அடிபடுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் கே. எஸ். தென்னரசு. இவர் 64,879 வாக்குகளா பெற்றார்.