நிரம்பியது பவானிசாகர் அணை... உபரி நீர் திறப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
ஈரோடு : பவானிசாகர் அணையில் இருந்து 12,338 கன அடி உபரி நீர் 18 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் உள்ளது கீழ்பவானி அணை. தென்னிந்தியாவில் மிகப்பெரிய இரண்டாவது மண் அணையாக திகழ்கிறது. 105 அடி உயரம் கொண்ட இந்த அணை, 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது.

102 அடியை எட்டிய பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, இன்று காலை 102 அடியை எட்டியது.

22-வது முறையாக முழு கொள்ளளவு
கடந்த 1955-ம் ஆண்டு பவானிசாகர் அணை கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 68 ஆண்டு காலம் ஆகும் நிலையில், இதுவரை 21 முறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது 22-வது முறையாக பவானிசாகர் அணை அணையின் நீர்மட்டம் மீண்டும் 102 அடியை எட்டியுள்ளது. அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது, அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அணையில் இருந்து நீர் வெளியேற்றம்
இன்று மதியம் 2.00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.31 டிஎம்சி ஆகவும் இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 12,338 கன அடியாக உள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் முழுவதும், அணையில் உள்ள பதினெட்டு மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் முடுக்கன்துறை, தொட்டம்பாளையம், புங்கார் ஆகிய கிராமங்களில் பவானி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், உடனடியாக வெளியேறுமாறும், துணி துவைக்கவும், குளிக்கவும் யாரும் பவானி ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications