என்ன நடக்குது ஈரோடு கிழக்கில்? போகசை திருப்பிய டெல்லி.. பாஜக இறக்கும் பிளான்.. ஆஹா அப்போ அதிமுக?
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக என்ன முடிவெடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பாஜகவில் மூத்த தலைவர்கள் இடையே கலவையான கருத்துக்கள் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சூடாக இருந்த தமிழ்நாடு அரசியலில் ஒரு குடம் பெட்ரோலை வீசிவிட்டு சென்று இருக்கிறது ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தேர்தல் களம் சூடாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கும், தனித்து போட்டியிடுமா.. கூட்டணி வைக்குமா.. என்ற கேள்வி உச்சத்தில் உள்ளது.
போகியில் பிறந்த ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம்! டீ கடை டூ முதல்வர்! அரசியலில் சாதித்தது, சறுக்கியது!
அதிமுக
ஏனென்றால் அதிமுகவின் நிலைப்பாடு கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. இங்கே அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். எடப்பாடியின் இந்த முடிவு ஈரோடு கிழக்கு தேர்தலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி எப்போது வேண்டுமானாலும் இங்கே வேட்பளாரை அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜாதான் இங்கு போட்டியிட்டு இருக்க வேண்டும். அவர் கடந்த தேர்தலில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார்.
எடப்பாடி
இதனால் அவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கும். ஆனால் இது போன்ற இடைத்தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சி போட்டியிடாமல்.. கூட்டணி கட்சி போட்டியிட்டால் ஆளும் கட்சி கூட்டணிக்கு வெற்றியை வாரிக்கொடுத்தது போல ஆகிவிடும். இந்த நிலையில்தான் இங்கே எடப்பாடி தரப்பு வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் தனது குழப்பமான நிலைப்பாடு குறித்து நேற்று பேட்டி அளித்தார். அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
ஆசை
இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம். பாஜக போட்டியிடும் பட்சத்தில் தேசிய கட்சி என்பதற்காக அவர்களுக்கு எங்களின் ஆதரவை தெரிவிப்போம் என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார். இந்த நிலையில்தான் தற்போது பாஜகவின் கோர்ட்டுக்கு முடிவு சென்றுள்ளது. பாஜகவின் முடிவை பொறுத்தே எடப்பாடி, ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பது தெரிய வரும். பாஜக சார்பாக இங்கே மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அல்லது மாநில பாஜக வேளாண் செயலாளர் ஜிகே நாகராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இதில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
பாஜக நிலைப்பாடு
பாஜகவில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் இதில் நிலவி வருகிறதாம். அதில் சிலர், பாஜக இப்போதுதான் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை பெற்று வருகிறது. மக்கள் நம்மை திரும்பி பார்க்க தொடங்கி உள்ளனர். இப்போது இடைத்தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை இழந்து, வாக்கு வங்கியும் குறைந்தால், தோல்வி அடைந்தால் அது பெரிய சர்ச்சையாகும். தமிழ்நாட்டில் நமக்கு கிடைத்து இருக்கும் சர்ஜ் காணாமல் போய்விடும். நம்மளுடைய இலக்கு லோக்சபா தேர்தலாகவே இருக்க வேண்டும். இதில் வெல்ல முடியாது என்று தெரிந்தும் போட்டியிடுவதால், நமக்கான ஆதரவு சரியவே வாய்ப்பு உள்ளது. மாறாக 2024 லோக்சபா தேர்தலுக்காக நாம உழைக்க வேண்டும் என்று சில மூத்த நிர்வாகிகள் பாஜக கூட்டத்தில் அறிவுரை வழங்கி உள்ளனராம்.
ஆதரவு
அதே சமயம் இன்னும் சிலரோ, இங்கே நாம் வெற்றிபெறவில்லை என்றாலும் லோக்சபா தேர்தலுக்கு நல்ல முன்னோட்டமாக இருக்கும். இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட நல்ல வாக்கு சதவிகிதத்தை எடுத்தாலே அது பாஜகவிற்கு பெரிய பலமாக இருக்கும். தமிழ்நாட்டில் தங்களின் வாக்கு சதவிகிதம் 10க்கும் மேல் உள்ளது என்று பாஜக கூறி வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மட்டும் 10% வாக்குகளுக்கு அருகில் பெற்றுவிட்டால் போதும் லோக்சபா தேர்தலில் அதை வைத்தே பாஜக அதிக இடங்களை அதிமுகவிடம் கேட்க முடியும். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களையும் பெற முடியும். கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு இது கூடுதல் பவரை கொடுக்கும். தோல்வி அடைந்தாலும் கூட பாஜகவிற்கு ஒரு வித நம்பிக்கையை இது கொடுக்கும்.
டெல்லி
அதனால் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்று வாதம் வைத்து வருகிறார்களாம். இதனால் தற்போது இதில் முடிவு எடுக்கும் கட்டுப்பாடு டெல்லிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி தரப்புதான் இதில் இறுதி நிலைப்பாட்டை எடுக்கும் என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் இங்கே போட்டியிட வேண்டும் என்று டெல்லி நினைக்கிறதாம். ஆனால் அந்த குறிப்பிட்ட வேட்பாளருக்கு இங்கே போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாஜக என்ன முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.