அடுத்தடுத்து சிக்ஸர் அடித்த எடப்பாடி.. கிரவுண்ட் பக்கமே வராதே ஓபிஎஸ்! கப்சிப்.. நடுங்க வைத்த "அமைதி"
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி அடித்து ஆடிக்கொண்டு இருக்க எதிரணியில் பவுன்சரையும், யார்க்கரையும் போட வேண்டிய ஓபிஎஸ் கிரவுண்டில் இல்லாமல் அப்படியே வெளியேறி இருக்கிறார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து சிக்ஸர்களாக அடித்து வருகிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ.. தர்ம யுத்தத்திற்கு பதிலாக "மௌன" யுத்தம் நடத்திக்கொண்டு இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இங்கே இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 3ம் தேதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. . இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட உள்ளார். எதிர் தரப்பில் பாஜக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக முடிவு செய்துள்ளது.அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அதிமுகவும் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறது. பாஜக இந்த தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்து இருக்கிறார்.
எட்டப்பன் வேலை பார்க்கிறார்கள்.. ஈரோடு இடைத்தேர்தலில் பாடம் புகட்டுவோம்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சிக்ஸர்
இந்த நிலையில்தான் கடந்த 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை அடித்துள்ளார். நேற்றுதான் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு திடீரென நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, டுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜின் அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது சிக்ஸர்
இரண்டாவதாக இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. திங்கள் கிழமை இது தொடர்பாக எடப்பாடி தரப்பு தனி மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
மூன்றுவாது சிக்ஸர்
மூன்றாவதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை இன்றே அறிவிக்க எடப்பாடி முடிவு செய்துள்ளாராம்.எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். மொத்தமாக 7 மணி நேரம் பிரேக் எடுத்து பிரேக் எடுத்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். விருப்பமனு தாக்கல் செய்த நிர்வாகிகளை பற்றிய பைலை மேஜையில் வைத்து அதை பிரித்துக்கொடுத்து ஆய்வு செய்துள்ளனர். இதையடுத்து இன்றும் எடப்பாடி ஆலோசனை செய்து வருகிறார். விரைவில் அவர் வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் சைலன்ட்
எடப்பாடி இப்படி அடித்து ஆடிக்கொண்டு இருக்க எதிரணியில் பவுன்சரையும், யார்க்கரையும் போட வேண்டிய ஓபிஎஸ் கிரவுண்டில் இல்லாமல் அப்படியே வெளியேறி இருக்கிறார். அவர் சார்பில் எடப்பாடியின் மனுவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இதுவரை யாரும் முறையிடவில்லை. இரட்டை இலை வேண்டும் என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தை ஓபிஎஸ் தரப்பு அணுகவில்லை. அதேபோல் தேர்தல் ஆணையத்தையும் ஓபிஎஸ் தரப்பு அணுகவில்லை. இதெல்லாம் போக வேட்பாளர் தேர்வு தொடர்பாக கடந்த 24 மணி நேரமாக ஆலோசனையும் செய்யவில்லை. தேர்தல் கமிட்டியையும் இதுவரை அமைக்கவில்லை. எடப்பாடி ஒரு பக்கம் அடித்து ஆடும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஏன் இப்படி மௌனமாக இருக்கிறார் என்று தெரியாமல் அவருக்கு நெருக்கமான நிர்வாகிகளே நடுங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறதாம். ஓபிஎஸ் வாக் அவுட் கொடுக்க போகிறாரா.. இவரை நம்பி இத்தனை நாள் இருந்தது வீணாகிவிடுமோ என்று பயப்பட தொடங்கி உள்ளனராம்.