ஆம் ஆத்மி காத்துல மட்டும்தான் இருக்கு.. களத்துல இல்லை.. அட்டாக் செய்த ராகுல்! குஜராத் போட்டி காரணமா?
ஹைதராபாத் : ஆம் ஆத்மி கட்சி காற்றில் மட்டுமே உள்ளது, களத்தில் இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில தேர்தலை குறிவைத்து ஆம் ஆத்மி செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி குஜராத் தேர்தல் நிலவரம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி நடைபயணம்
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்போது தெலுங்கானாவில் நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு இடையே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், குஜராத் தேர்தல் பற்றி பேசினார். 182 எம்.எல்.ஏ தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இன்னும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி காற்றில் மட்டுமே
ராகுல் பேசுகையில், "எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திறம்பட போராடுகிறது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். ஆம் ஆத்மி கட்சி காற்றில் மட்டுமே உள்ளது, அது களத்தில் இல்லை. ஆம் ஆத்மி கட்சி வழங்கிய விளம்பரங்களின் அடிப்படையில் ஊடகங்கள் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளன. அதற்கு மக்களின் உண்மையான ஆதரவு இல்லை.

பாஜகவுக்கு எதிரான அலை
குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி திடமான கட்சி. அங்கு நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறப்போகிறது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திடமான அடித்தளம் உள்ளது. அங்கு பாஜக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை பலமாக இருக்கிறது. அங்கு நான் பிரசாரம் செய்வது பற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார்.

மந்திரக்கோல் அல்ல
காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்களுடனான தொடர்பு சற்று பலவீனமாக இருக்கிறது. மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த இந்த நாடு தழுவிய பாதயாத்திரை நல்லதொரு முதல்படியாக இருக்கும். ஆனால் இதுவே ஒரு மந்திரக்கோல் அல்ல என்பதும் எங்களுக்குத் தெரியும்.

சித்தாந்த சண்டை
இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான சண்டை. ஒன்று தேசத்தை பிளவுப்படுத்த முயல்கிறது, மற்றொன்று தேசத்தை ஒன்றிணைக்க முயற்சிக்கிறது. இந்தக் கோடு மிகவும் தெளிவாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவின் சித்தாந்தத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்." எனத் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி குறி
டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த குறி குஜராத் மாநிலமாக இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியின் பெருவாரியான வாக்குகளை ஆம் ஆத்மி பிரிப்பதாகத் தெரிகிறது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி குடைச்சலாக மாறும் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ஆம் ஆத்மியை விளாசியுள்ளார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications