தென்னிந்தியாவிலும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம்- தெலுங்கானாவில் ரயில் நிலையம் சூறையாடல்- தீ வைப்பு
ஹைதராபாத்: வட இந்தியாவில் பற்றி எரியும் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்துக்கு எதிரான போராட்டம் தென்னிந்தியாவிலும் தீவிரமாகி உள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ரயில் நிலையம் சூறையாடப்பட்டு தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தால் பெரும் சர்ச்சையாகி உள்ளது. ராணுவ பணியை 4 ஆண்டாக குறைக்கிறது இந்த அக்னிபாத் திட்டம். இதற்கு நாடு முழுவதும் இளைஞர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 3-வது நாளாக இப்போராட்டம் இன்றும் தொடருகிறது. பீகாரில் பல இடங்களில் ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை போக்குவரத்தும் முடங்கி உள்ளது.
இப்போராட்டம் தென்னிந்தியாவிலும் தொடங்கி இருக்கிறது. தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குள் நுழைந்த இளைஞர்கள் அந்நிலையத்தை சூறையாடினர். பொருட்களை தீயிட்டு கொளுத்தி ரயில்வே தண்டவாளங்களில் வீசினர். இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு தப்பி ஓடினர்.
ரயில் நிலைய கடைகளை சூறையாடிய இளைஞர்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.