ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்த இஸ்லாமிய தலைவர்கள்.. கொதித்து போன ஓவைசி.. எலைட் என விமர்சனம்
ஹைதராபாத்: மோகன் பகவத்தை சந்தித்த இஸ்லாமிய தலைவர்கள் அனைவரும் எலைட் தலைவர்கள் என்றும் அவர்களுக்கு கள நிலவரம் தெரியாது எனவும் ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வருபவர் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி.
இன்று தனது மக்களவை தொகுதியான ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை கடந்த மாதம் முஸ்லீம் தலைவர்கள் 5 பேர் சந்தித்தது குறித்து பேசினார்.

தவறாகவே காட்டப்படுகிறோம்
அப்போது ஓவைசி கூறியதாவது:- ''இந்த தலைவர்கள் மோகன் பகவத்தை சந்தித்து பேசியிருக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தம் என்னவென்று ஒட்டு மொத்த உலகமும் அறியும். ஆனால் நீங்கள் (முஸ்லீம் தலைவர்கள்) சென்று சந்தித்து உள்ளீர்கள். இவர்கள் முஸ்லீம் சமூகத்தின் மேல்தட்டு பிரிவினர். நமது அடிப்படை உரிமைகளுக்காக அரசியல் ரீதியாக போராடும் போது தவறாகவே காட்டப்படுகிறோம்.

ஜனநாயக உரிமை
இந்த மேல்தட்டு பிரிவினர் தங்களை மிகவும் அறிவாளிகளாக நினைக்கின்றனர். ஆனால், கள நிலவரத்துடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. மிகவும் சொகுசாக வாழ்ந்து வரும் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவரை சந்தித்துள்ளனர். இது அவர்களின் ஜனநாயக உரிமை. இது குறித்து நான் கேள்வி எழுப்பப்போவது இல்லை. அதேபோல், அவர்களுக்கும் எங்களை பற்றி கேள்வி எழுப்ப எந்த உரிமையும் இல்லை'' என்றார்.

முஸ்லீம் தலைவர்களை சந்திக்கும் மோகன் பகவத்
பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமீப காலமாக முஸ்லீம் தலைவர்களை சந்தித்து வருகிறார். இன்று கூட, அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமெர் அகமது இல்யாசியை மோகன் பகவத் சந்தித்தார். டெல்லியின் மையப்பகுதியில் உள்ள மசூதியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது வேறு யாரும் இல்லை என்றும் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

கவலை அளிக்கிறது
முன்னதாக, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரோஷி மற்றும் டெல்லி முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அலிகார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் உத்தின் ஷா, முன்னாள் எம்.பி ஷாகித் சித்திக் மற்றும் தொழில் அதிபர் சையத் ஷீர்வானி ஆகியோரையும் மோகன் பகவத் சந்தித்து பேசியிருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி, ''நாட்டில் தற்போது நிலவும் சூழல் தனக்கு கவலை அளிப்பதாகவும் தற்போதுள்ள சூழல் மிகவும் தவறானது. ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையுடன்தான் நாடு முன்னேற முடியும் என்று மோகன் பகவத் கூறியதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications