கோயில்கள் மேல் மசூதிகளா? எதற்கும் ஆதாரம் இல்ல -பாஜக பிரமுகரின் அவதூறை அம்பலப்படுத்திய தொல்லியல் துறை
ஐதராபாத்: மசூதிகளை தோண்டி பார்த்தால் சிவலிங்கம் கிடைக்கும் என தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கூறிய நிலையில், இந்து மதம்சார்ந்த இடங்களில் தொன்மையான மசூதிகள் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என தொல்லியல்துறை தெரிவித்து இருக்கிறது.
பாபர் மசூதி தடைக்கு பிறகு அடுத்த இலக்கு என பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியையும், மதுராவில் உள்ள ஈத்கா மசூதியையும் சுட்டிக்காட்டினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இதற்கு அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் கட்டிய கியான்வாபி மசூதி இருக்கிறது.
கியான்வாபி மசூதி
சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக பேசப்பட்டு வந்த இந்த மசூதிதான் சர்ச்சைகளுக்கு இலக்காகி இருக்கிறது. அதாவது கியான்வாபி மசூதி இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக வாரணாசி நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட ஆய்வில் சிவலிங்கம் போன்ற வடிவம் இருந்ததாக கூறி அதற்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈத்கா மசூதி
இதனை தொடர்ந்து மதுராவில் உள்ள பழமையான ஈத்கா மசூதி இருக்கும் இடம் கிருஷ்ணர் பிறந்தது எனக்கூறி வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. அண்மையில் காசிக்கு சென்ற பாஜக ஆதரவாளரான நடிகை கங்கனா ரனாவத், "அயோத்தியில் ராமர் எங்கும், எதிலும் நிறைந்து இருப்பதை போன்றே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்து உள்ளனர். ஹரஹர மஹாதேவ்." என்றார்.
தாஜ்மஹால்
இதேபோல் முகலாய பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜுக்காக உலக அதிசயங்களுல் ஒன்றான தாஜ்மஹாலை கட்டினார். இந்த நிலையில் தாஜ்ஹாலுக்கு அடியில் பூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படும் சுமார் 22 அறைகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என பாஜக பிரமுகர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல் குதுப் மினார், கர்நாடகாவில் உள்ள மசூதி என பல மசூதிகள், முகலாயர் கால கட்டிடங்கள் இருக்கும் இடங்களில் கோயில்கள் இருந்ததாக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
தொல்லியல்துறை விளக்கம்
இதனிடையே தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய், "மசூதிகளை தோண்டி பார்த்தால் சிவலிங்கை இருக்கலாம்" எனக்கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக ஆர்வலர் ராபின் ஷாச்யூஸ் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ்,"தெலுங்கானாவில் உள்ள இந்து மத தலங்களில் மசூதிகள் கட்டப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கமளித்து இருக்கும் தொல்லியல் துறை, தெலுங்கானாவில் இருக்கும் தொன்மையான மசூதிகள் இந்து மதம் சார்ந்த இடங்களில் கட்டப்பட்டதற்கான ஆதாரம் இல்லை."என்று கூறியுள்ளது.