தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
ஹைதராபாத்: தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள், இன்று மாலையுடன் ஓய்ந்தன. இரு மாநிலங்களிலும் வரும் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ராஜஸ்தானில் வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 2873 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 1821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இரு மாநிலங்களிலும் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. முன்னதாக ராஜஸ்தானில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், வசுந்தரா ராஜே சிந்தியா, ராமன் சிங் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதேபோல காங்கிரஸ் தலைவர்கள் அசோக் கெலாட், சச்சின் பைலட் போன்றோரும், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பாஜக சார்பில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை, வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்பிறகு டிசம்பர் 11ம் தேதி மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து இவ்விரு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.