நபிகள் குறித்து சர்ச்சை; பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏவுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து ஹைதராபாத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பாஜவிலிருந்து எம்எல்ஏ ராஜா சிங் இடை நீக்கம் செய்யப்பட்டாலும், அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த பிரச்னையையொட்டி எம்எல்ஏவின் உருவ பொம்மையை எரித்தும், அவர் வீட்டின் மீது கற்களை வீசியும் போராட்டக்காரர்கள் தங்கள் எதிரப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில் தற்போது போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
தொடர்ந்து பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஹைதராபாத் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எம்எல்ஏ ராஜா சிங், இஸ்லாமியர்களின் புனிதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். ஆனால் அன்று மாலையே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்தது. இது ஹைதராபாத் முழுவதும் பதற்றத்தை அதிகரித்தது.
காமெடி மேடை பேச்சாளரான முனாவர் ஃபாருக்கி என்பவர் ராமர்-சீதை குறித்து தரக்குறைவாக பேசியதாகவும், இது இவ்வாறு தொடர்ந்தால் தானும் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசுவேன் என்றும் எம்எல்ஏ ராஜாசிங் கூறியிருந்தார். இதனையடுத்து மீண்டும் இதேபோல ஃபாருக்கி பேசியதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே எம்எல்ஏ ராஜாசிங் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கூறியுள்ளார். இதுவே பிரச்னைக்கு மையப்புள்ளியாக கருதப்படுகிறது.
பிரச்னை தீவிரமடைந்த நிலையில், கைது-ஜாமீனில் விடுதலை-கட்சியிலிருந்து இடைநீக்கம் உள்ளிட்டவை நடந்த பின்னரும் அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பவில்லை. நேற்றிரவு அதிக அளவில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் எம்எல்ஏ ராஜா மீது சட்டரீதியான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தின்போது கற்களை வீசியும், அவரது உருவ பொம்மையை எரித்தும், மதம் சார்ந்த முழக்கங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர்.
ஏற்கெனவே நபிகள் நாயகம் குறித்து எதிர்மறையாக கருத்து கூறி இருந்த பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இது நாடு முழுவதும் கலவரங்கள் ஏற்பட காரணமாக இருந்த நிலையில் அவர் மீது பல்வேறு மாநிலங்களின் காவல்நிலையங்களிலிருந்து 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மற்றுமொரு சர்ச்சையை ராஜா சிங் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications