நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக இருந்த 10 வயது சிறுவன்.. பெத்தவங்க கண் முன்னே நடந்த அந்த கோர சம்பவம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஒரு நீச்சல் குளத்தில நீச்சலடித்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை அடுத்த சைதன்யபுரி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (10). இவர் லிங்கம்பள்ளியில் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்ததால் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அவர் சைதன்யபுரியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு கோடை விடுமுறையை தனது வீட்டருகே உள்ள நண்பர்களுடன் கழித்தார்.
மனோஜ்குமார்
இந்த நிலையில் மனோஜ்குமாரும் அவரது பெற்றோரும் அவர்களது பாட்டியின் வீட்டுக்கு நேற்று சென்றனர். அப்போது வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக ஒரு தனியார் நீச்சல் குளத்திற்கு சென்றனர். அங்கு கட்டணத்தை செலுத்திய பெற்றோர் உள்ளிட்டோர் மனோஜ் நீச்சலடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நீச்சல் பயிற்சி
கோடை காலம் என்பதால் அந்த நீச்சல் பயிற்சி நிலையத்திற்கு நிறைய குழந்தைகள் வந்திருந்தனர். அப்போது அவர்கள் நீச்சலடிப்பதையும் மனோஜின் பெற்றோர் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து மனோஜ் நீரில் மூழ்கினார். பின்னர் திரும்பி பார்க்கும் போது மனோஜை காணவில்லை.
மூழ்கிய மனோஜ்
அப்போது மனோஜ் மூழ்கியதாக மற்ற சிறுவர்கள் சொன்னதை அடுத்து பெற்றோர் கதறினர். பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடல் ஓஸ்மானியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
மனோஜ் குடும்பத்தினர்
இந்த சம்பவம் குறித்து மனோஜின் குடும்பத்தினர் கூறுகையில், மனோஜ் லிங்கம்பள்ளியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படித்து வந்தார். கோடை விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தார். நாங்கள் கோடையை சமாளிக்க ப்ளூ ஃபேப் என்ற நீச்சல் குளத்திற்கு சென்றிருந்தோம். அங்கு பாதுகாப்பு டியூப்புகள் இல்லை. இதனால் எந்த வித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமலேயே நீச்சல் குளத்தில் மனோஜ் சென்றார்.
10 நிமிடங்கள் தாமதம்
மனோஜ் மூழ்குவதை பார்த்ததும் நாங்கள் சப்தமிட ஆரம்பித்துவிட்டோம். ஆனால் நிர்வாகத்தினர் 10 நிமிடங்கள் தாமதமாகவே வந்தனர். அவர்கள் அங்கேயே இருந்திருந்தால் எங்கள் பிள்ளையை உயிரோடு மீட்டிருந்திருக்கலாம் என்றனர். அந்த நீச்சல் குளத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. அதில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் மனோஜ் ஒரு கட்டத்தில் மூழ்குகிறார். சிறுவர்கள், மனோஜ் பெற்றோர் பதறி ஓடுகிறார்கள். பின்னர் சிறுவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். இந்த பதைபதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.