ஹைதராபாத் பல்கலையில் சர்ச்சை.. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு! பாயும் நடவடிக்கை!
குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி பிபிசி தயாரித்த ஆவணப்படம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதரபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிபிசி ஆவணப்படம் தயாரித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தடையை மீறி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் திரையிடப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் நடவடிக்கை பாய உள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி ரயில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக கலவரம் வெடித்தது. இதில் குஜராத்தின் பல இடங்களில் கோரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கலவரம் நடந்தபோது குஜராத் முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். இந்நிலையில் தான் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிபிசி செய்தி நிறுவனம் தற்போது குஜராத் கலவரம் குறித்து 2 பகுதிகளாக ஆவணப்படங்களை தயாரித்துள்ளது. முதல் பாகம் வெளியான நிலையில் 2வது பாகம் விரைவில் வெளியாக உள்ளது.
குடியரசு தினவிழா:தமிழக 3 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்..21 பேருக்கு காவல் பதக்கம்! லிஸ்ட்
கடும் எதிர்ப்பு
‛‛இந்தியா- மோடிக்கான கேள்விகள்" என்ற தலைப்பில் வெளியான முதல் பாகம் வெளியாகி உள்ளது. இதில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பிபிசியின் இந்த ஆவணப்படம் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பையும் மீறி பிபிசி தவறான நோக்கத்தில் பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பும் நோக்கத்தில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மத்திய அரசு உத்தரவு
மேலும், இதற்கிடையே ட்விட்டர், யூடியூப்பில் உள்ள ஆவணப்படங்களை நீக்கம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதோடு, இந்த ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட சிலர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர். இது தற்போது பெரிய பிரச்சனையாக உருமாறி உள்ளது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில்
இந்நிலையில் தான் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சகோதரத்துவ இயக்கம் என்ற பெயரிலான மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள், பிபிசி ஆவணப்படத்தை பல்கலைக்கழகத்தில் திரையிட்டனர். இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியானது. இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுபற்றி பல்கலைக்கழக பதிவாளர் டேவிஸ் நிகம் கூறுகையில், ‛‛Fraternity Movement எனும் மாணவர்கள் அபை்பு பிபிசி ஆவணப்படத்தை வடக்கு கேம்பஸில் உள்ள ஷாப்பிங் காம்பளக்சில் எவ்வித அனுமதியின்றி திரையிடப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
பாயும் நடவடிக்கை
இதுபற்றி பல்கலைக்கழகம் சார்பில், ‛‛பிபிசி ஆவணப்படத்தை திரையிடும் முன்பு அதிகாரிகளிடம் மாணவர் அமைப்பினர் அனுமதி எதுவும் கோரவில்லை. பல்கலைக்கழக பதிவாளரிடம் ஏபிவிபி அமைப்பினர் புகார் தெரிவித்த பிறகு தான் விஷயம் தெரியவந்தது. இதுபற்றி பல்கலைகழக பாதுகாப்பு பிரிவினரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என கூறப்படுகிறது.
ஜேஎன்யூ பிரச்சனை
முன்னதாக டெல்லி ஜேஎன்யூ எனும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று பிபிசி ஆவணப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இண்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அங்கு இருதரப்பு மோதல் ஏற்பட்ட நிலையில் பதற்றம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.