காப்பீட்டு பணத்துக்காக..தன்னைபோல் இருந்த அப்பாவியை எரித்து கொன்ற அரசு ஊழியர்.. சிக்கவைத்த 'கால்'
ஹைதராபாத்: காப்பீட்டு தொகையை பெறுவதற்காக தன்னை போல இருந்த அப்பாவி கூலித்தொழிலியை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்த தலைமைச் செயலக ஊழியரை தெலங்கானா போலீஸார் கைது செய்துள்ளனர்.
யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வகையில் கொலையை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செய்த அவரை, போலீஸார் தங்கள் புலனாய்வுத் திறனால் பொறி வைத்து பிடித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் கால் பாதம்தான், குற்றவாளியை போலீஸார் கைது செய்வதற்கு முக்கிய தடயமாக இருந்துள்ளது.

பயங்கர திட்டம்
தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்மா (48). மது உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையான அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். இதனால் சுமார் 1 கோடி வரை அவருக்கு கடன் ஏற்பட்டது. இதில் இருந்து தப்பிக்க நினைத்த தர்மா, ஒரு சதித்திட்டத்துடன் தனது பெயரில் சுமார் ரூ.7 கோடிக்கும் மேல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை வாங்கினார். ஓராண்டாக அந்த பாலிசி தொகைகளை சரியாக செலுத்தி வந்தார். அதன் பிறகுதான், தனது கொடூரமான திட்டம் குறித்து தனது மனைவி, மகன் மற்றும் சகோதரியிடம் கூறியிருக்கிறார் தர்மா. அதாவது, தன்னை போல இருக்கும் ஒருவரை யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிட்டால் இந்த ரூ.7 கோடி பணமும் தங்களுக்கு கிடைத்துவிடும் என்ற திட்டம்தான் அது.

"என்னை போல் ஒருவன்"
முதலில் இந்த திட்டத்தை கேட்டு பயந்த அவரது குடும்பத்தினர், பிறகு ஒப்புக்கொண்டனர். அதன்படி, தன்னை போல இருக்கும் நபரை தேடி தெலங்கானா முழுவதும் குடும்பத்தினருடன் அலைந்து திரிந்தார் தர்மா. அப்போது மகாராஷ்ட்ரா எல்லையில் வசித்து வந்த பாபு என்பவரை பார்த்துள்ளார். முக அமைப்பு, உருவம் என பார்ப்பதற்கு ஓரளவுக்கு தன்னை போலவே பாபு இருப்பதை கண்ட தர்மா, பாபுவிடம் பழகத் தொடங்கினார். கூலித் தொழிலாளியான பாபுவின் குடும்ப வறுமையை கண்டு வருத்தப்படுவதை போல நடித்த தர்மா, தனக்கு சொந்தமாக விவசாய நிலம் இருப்பதாகவும், அதில் வேலை செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் தருகிறேன் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார் தர்மா.

கொடூரக் கொலை
உண்மையில் தன் மீதுள்ள அன்பால்தான் தர்மா தனக்கு உதவி செய்கிறார் என நினைத்த பாபு, அவர் கூறியபடி மேதக் மாவட்டத்திற்கு சென்றார். அவரது மனைவி மற்றும் இரு மகள்களிடம் மேதக்குக்கு வேலை விஷயமாக செல்கிறேன் என மட்டும் கூறிவிட்டு வந்துள்ளார் பாபு. பின்னர் தர்மாவின் விவசாய நிலத்தில் அவர் விலை செய்து வந்தார். கூறியபடி, மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாயை பாபுவுக்கு கொடுத்து வந்திருக்கிறார் தர்மா. மூன்று, நான்கு மாதங்கள் சென்ற பிறகு, பாபுவை தீர்த்துக்கட்ட தர்மாவும், அவரது குடும்பத்தினரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 9-ம் தேதி இரவு தர்மாவும், அவரது உறவினர் நவாஸ் (44) என்பவரும் சேர்ந்து பாபுவை அடித்து கொலை செய்தனர்.

காட்டிக்கொடுத்த 'கால்'
அதன் பிறகு, அவரை தனது காரில் ஓட்டுநர் சீட்டில் அமர வைத்த தர்மா, கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பினார். பின்னர் மறுநாள் அதிகாலை போலீஸார் அங்கு வந்து பார்த்தனர். விசாரணையில், அது தர்மாவின் கார் என்பது தெரியவந்தது. எனவே, உள்ளே இறந்து கிடப்பதும் தர்மாதான் என போலீஸார் முடிவு செய்தனர். அப்போதுதான் எரியாமல் இருந்த பாபுவின் கால் பாதத்தை பார்த்துள்ளனர். பொதுவாக, அரசு ஊழியர்கள் தண்ணீர், சேறு ஆகியவற்றில் அதிகம் நிற்க வேண்டியது கிடையாது. எனவே அவர்களின் கால் பாதம் வழுவழுப்பாக இருக்கும். ஆனால், காரில் இருந்தவரின் கால் பாதமோ வெடிப்பும், சகதி கரையாகவும் இருந்துள்ளன.

தட்டி தூக்கிய போலீஸார்
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், தர்மாவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் மகனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாருக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என நினைத்து, அவர்களும் உண்மையை உளறினர். அதன் பிறகுதான், இறந்தது தர்மா அல்ல.. பாபு என்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, தலைமறைவாக இருந்த தர்மாவை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி நீலா (43), சகோதரி சுந்தா (49), 17 வயது மகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications