உலகளவில் உள்ள பரம ஏழைகளில் 3ல் ஒருவர் இந்தியர்... ஐநா வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை!
டெல்லி: உலக அளவில் உள்ள பரம ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு பேர் இந்தியாவில்தான் உள்ளனராம். அதேபோல 5 வயதுக்குட்பட்டோர் மரணமடைவதும் இந்தியாவில் ன் அதிகம் உள்ளதாம்.
ஐ.நாவின் மில்லனியம் வளர்ச்சி இலக்கு தனது அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா இன்று டெல்லியில் தெரிவித்தார். அப்போது அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.
மேலும், இது தொடர்பாக அப்போது அவர் கூறியதாவது :-
மிகப்பெரிய சவால்...
நரேந்திர மோடி அரசுக்கு இந்த அறிக்கையானது மிகப் பெரிய சவாலாகும். ஆனால் விரைவில் நல்ல நாட்கள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
நம்பிக்கை...
இதுவரை நாம் செய்தது குறித்து நாம் நிச்சயம் பெருமைப்பட முடியாது. வறுமைதான் மிகப் பெரிய சவால். அடுத்த அறிக்கை வரும்போது, நிச்சயம் நாம் மேம்பட்டிருப்போம் என்று நான் நம்புகிறேன். . பிரதமர் ஏழ்மையை ஒழிக்க உறுதி பூண்டுள்ளார்.
தவறான காரணிகள்...
அதேசமயம், இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள பல்வேறு காரணிகள் இந்தியாவுக்குப் பொருத்தமானவை அல்ல. அது தவறாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் ஹெப்துல்லா.
திறந்தவெளி வசிப்பிடம்...
இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 60 சதவீத மக்கள் திறந்த வெளிகளில் வசிக்கின்றனராம். மேலும் உலக அளவில் பிறப்பின்போதுஇறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை இந்தியாவில் 17 சதவீதமாக உள்ளதாம்.
2ம் இடத்தில் சீனா....
இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இங்கு 13 சதவீதம் பேர் பரம ஏழைகளாக உள்ளனர். 3வது இடத்தில் நைஜீரியா 9 சதவீதத்துடன் உள்ளது. வங்கதேசத்தில் இது 5 சதவீதமாக உள்ளது.
தெற்காசிய நாடுகள்...
ஆசிய நாடுகளை விட தெற்காசிய நாடுகள்தான் இந்த விஷயத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளனவாம். அதேசமயத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை தெற்காசியாவில் நன்றாக உள்ளதாம்.
கல்வி...
மேலும் ஒரு நல்ல விஷயமாக, தெற்காசியாவில் இளைஞர்களிடையிலான படிப்பறிவு விகதம் 1900 -2011 இடையே 60 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பெண் கல்வி...
அதேபோல இளம் பெண்கள் மத்தியிலும் கல்வி அறிவு மேம்பட்டுள்ளது. அதாவது 97 சதவீதமாக இது உள்ளது.