யாஸ் புயலால் 1 கோடி பேர் பாதிப்பு: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு
கோர தாண்டவமாடிய யாஸ் புயலுக்கு ஒடிசா, மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா: வங்கக் கடலில் உருவாகி ஒடிசா, மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களை சூறையாடிய யாஸ் புயலுக்கு 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்.
வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை உருவான யாஸ் புயல், தொடர்ந்து அதி தீவிர புயலாக வலுவடைந்தது. புதன்கிழமை காலை 9 மணிக்கு ஒடிசாவின் பாலசூர் அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. முதலில் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல் பின்னர் 24 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. கடந்த 26ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 120 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

கரையைக் கடந்த புயலின் வேகம் குறைந்து தீவிர புயலாக அது வலுவிழந்தது. புயல் கரையைக் கடந்த போது பலத்த காற்றுடன் ஒடிசாவின் பாலசோர், பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.
மேற்கு வங்கத்தில், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள், திகா, கிழக்கு மெதினிபூர் மற்றும் நந்திகிராம் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாய் காட்சியளித்தன. பல வீடுகளின் மேற்கூரைகள், சாலையோரம் இருந்த பெட்டி கடைகள் சூறைக் காற்றில் தூக்கி வீசப்பட்டதுடன், ஆங்காங்கே சாலைகளில் மரங்களும் முறிந்து விழுந்தன.
கருமேகங்களால் சூழ்ந்த பல பகுதிகள் நண்பகலிலேயே இருண்டு காணப்பட்டன, நீர்நிலைகளின் தடுப்பு சுவர்களை தகர்த்து பல பகுதிகளில் நீர் ஊருக்குள் புகுந்தது. ஒடிசாவின் பாரதீப் படகுதுறையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் சேதமடைந்தன.

பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டார். புயல் காரணமாக 3 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும், 134 நீர்நிலைகளின் கரைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இந்நிலையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் யாஸ் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.












Click it and Unblock the Notifications