ஹைதராபாத்தில் சோகம்.. அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்
ஹைதராபாத்தில் கட்டுமானப்பணி நடந்து வரும் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஹைதராபாத்: பல அடுக்குமாடி கட்டடம் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் அதில் பணியாற்றிய 10 பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் எல்கைக்குட்டபட்ட நானக்கரம்கூடா என்ற இடத்தில் பல அடுக்குமாடி கட்டடம் கட்டடப்பட்டு வந்தது.
7 அடுக்குமாடி கொண்ட அந்தக் கட்டடப்பணிகள் இன்னமும் முடிக்கப்படவில்லை. அதில் வியாழக்கிழமை இரவு பணி முடிந்து அங்கு பணியாட்கள் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. அதில் அங்கு வேலை செய்துவிட்டு ஓய்வு எடுத்த பணியாட்களின் குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கி மாயமாகி உள்ளனர்.
அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதில் காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாயமாகிவர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இடிபாடுகளில் இருந்து 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
மேலும், 15 முதல் 20 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மாநில உள்துறை அமைச்சர் நரசிம்ம ரெட்டி, கலால் வரித்துறை அமைச்சர் பத்மா ராவ், மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் பத்மா ராவ், அனைத்து இடிபாடுகளையும் அகற்றிய பின்னரே எத்தனை பேர் அதில் சிக்கி உள்ளனர் என்பது தெரியவரும் என்றும், அதற்கு முன்பாக எதுவும் கூற இயலாது என்றும் தெரிவித்தார்.
தெலங்கானா மாநில உள்துறை அமைச்சரான நரசிம்ம ரெட்டி இச்சம்பவம் குறித்து கூறுகையில், இங்குள்ளவர்கள் யாரும் எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர் என்பதை சரியாக தெரிவிக்கவில்லை.
எனவே,மீட்புப் பணிகள் முடிந்த பிறகே அதுகுறித்த விவரம் தெரிய வரும் என்று கூறினார். இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானதாகவும், 7 பேர் பலியானதாகவும் இரு வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, இடிபாடுகள் அனைத்தையும் அகற்றிய பிறகே சரியான தகவல் தெரியவரும் என்று அவர் கூறினார்.
தற்போதைய நிலையில் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கி உள்ளவர்களை மீட்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டதில் ஏதேனும் விதிமீறல் இருப்பதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பத்மா ராவ் தெரிவித்தார்.
ஹைதராபாத் பெருநகர காவல் ஆணையாளர் ஜனர்தன் ரெட்டி கூறியதாவது: இதுவரை எந்த ஒரு உடலும் மீட்கப்படவில்லை. இடிபாடுகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது கூறுவது கஷ்டம் என்று தெரிவித்தார்.