மணல் அள்ள 100% தடை விதித்தது தவறு: தலைமை நீதிபதி சதாசிவம் கருத்து
நாடு முழுவதும் கடலோரங்களிலும், ஆற்றுப்படுகைகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மணல் அள்ளுவதற்கு முழுமையான தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற பசுமை தீர்ப்பாய நீதிமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கடல் மற்றும் ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு 100% தடை விதிக்கப்பட்டது தவறு. எனது வீடும் நிலமும் தமிழ்நாட்டில் காவிரி கரையில் இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஆற்றில் தண்ணீரே இருக்காது. மணல்தான் இருக்கும். குறைந்த பட்சம் 3 அடி முதல் 5 அடி வரை அந்த மண்ணை அகற்றாவிட்டால் தண்ணீர் வரும்போது வெள்ளம் வீணாக கடலுக்குத்தான் போய்ச் சேரும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பும் வளர்ச்சியும் சம நிலையில் இருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் சிறிய அளவிலான மக்கள் நலன்கள் பெரிய அளவிலான மக்கள் நலன்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்றார்.