பெங்களூர்-எர்ணாகுளம் ரயில் விபத்து: கேரளாவைச் சேர்ந்த 12 பேர் பலி- முதல்வர் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் கேரளாவைச் சேர்ந்த 12 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் உம்மண் சாடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளதாவது:
ஓசூர் அருகே நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து கர்நாடகா உள்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசினேன். கேரளாவைச் சேர்ந்த 12 பேர் பலியாகி இருப்பதாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தில் இருந்து 7 உடல்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கேரளாவில் சிகிச்சை பெற விரும்பினால் அவர்களுக்கான ஆம்புலன்ஸ் வசதிகளை செய்து தர கர்நாடக அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்டன
இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த மூவரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தியார ஆண்டனி (வயது 57), திரிசூரைச் சேர்ந்த ஆமன் (9), எர்ணாகுளத்தைச் சேர்ந்த தேவசி (60) ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் ஆமனின் தாய் ஷர்மிளா மிகவும் ஆபத்தான நிலையில் ஆனைக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருவனந்தபுரம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவ இடத்துக்கு விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தோரின் உறவினர்களை அழைத்துச் செல்ல அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கும் கேரளா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் திருவாச்சூர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.