பெங்களூரில் வகுப்புக்கு டிமிக்கி அடித்த 12 மாணவர்களுக்கு மொட்டை அடித்து தண்டனை!
பெங்களூர்: பெங்களூர் பள்ளி ஒன்றில் வகுப்புக்கு செல்லாத மாணவர்கள் 12 பேருக்கு மொட்டை அடித்து தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் விட்டல் மல்லையா ரோட்டில் புனித ஜோசப் இந்தியன் உயர் நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் 12 மாணவர்கள் வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் இருந்து வந்துள்ளனர். அந்த 12 மாணவர்களும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விடுதி வார்டன் மாணவர்களுக்கு மொட்டை அடித்து தண்டனை அளித்துள்ளார். இது குறித்து மாணவர் ஒருவரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த 12 மாணவர்களின் தலையில் பொடுகும், பேணும் இருந்தது. அதனால் தான் அவர்களுக்கு மொட்டை அடித்தோம் என்று வார்டன் சகோதரர் கிரண் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசில் புகார் அளித்த நபர் கூறுகையில்,
எங்கள் பிள்ளைகள் வகுப்புகளுக்கு செல்லாமல் இருந்தது உண்மை தான். அவர்கள் பள்ளி நேரத்தில் வகுப்பில் இல்லாமல் விளையாட்டு மைதானத்தில் இருந்துள்ளனர். என் மகன் ஒரு வகுப்புக்கு செல்லவில்லை என்றும், அதற்காக தண்டிக்கப்படுவார் என்றும் கிரண் எனக்கு செவ்வாய்க்கிழமை போன் செய்து கூறினார். புதன்கிழமை பள்ளிக்கு சென்ற என் மனைவி எங்கள் மகன் மொட்டை அடித்து நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இப்படியா தண்டனை அளிப்பது என்றார்.
சம்பங்கிராம் நகரில் இருந்து ஒருவரை வரவழைத்து மாணவர்களுக்கு மொட்டை அடிக்க வைத்துள்ளார் கிரண். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.