ஹைதராபாத்தில் 68 நாட்கள் விரதமிருந்த 13 வயது ஜைன மத சிறுமி மரணம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது ஜைன மத சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜைன மத சம்பிரதாயம் மற்றும் வழக்கத்தின்படி, இந்த பூவுலகில் வாழ விரும்பாத முதுமக்கள் அன்னம், தண்ணீர் அருந்தாமல் உண்ணாநிலையை கடைபிடித்தும், தவக்கோலம் பூண்டும் 'சவ்மாஸா' அல்லது 'சந்த்தாரா' எனப்படும் ஜீவசமாதி நிலையை அடைவதுண்டு.
ஆனால், இத்தகைய வழியில் உயிரை மாய்த்துக்கொள்ள சட்டம் அனுமதிப்பதில்லை. எனினும், வடமாநிலங்களில் இதுபோன்ற 'சந்த்தாரா' எனப்படும் ஜீவசாமாதி நிலையை அடைவது சகஜமான மத சம்பிரதாயமாக உள்ளது.
ஹைதராபாத் அருகில் உள்ள செகந்திராபாத் பகுதியில் உள்ள பாட்பஜார் பகுதியில், நகைக்கடை நடத்தி வருபவர் லட்சுமிசந்த் சன்சாதியா. இவரது மகள் ஆராதனா (13), எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இந்த உலக வாழ்வை துறக்க ஆராதனா தீர்மானித்ததாக கூறப்படுகிறது.
இதற்காக புதுமணப் பெண்ணைப்போல் அலங்கரிக்கப்பட்டு, தங்கமுலாம் பூசப்பட்ட ரதத்தில் அமர்ந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட ஆராதனாவின் 'சந்த்தாரா' எனப்படும் உண்ணாநிலை சமீபத்தில் பத்தாவது வாரத்தை நெருங்கியபோது உள்ளூர் ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்கள் வெளியாகின. ஆரதனாவுடன் பலர் செல்பி எடுத்துக்கொள்ளவும் விரும்பினர்.
இதைத் தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் 68 நாள் வரை உண்ணாவிரதம் இருந்த சிறுமி சமீபத்தில் மயங்கி விழுந்தாள். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.