அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய திடீர் தீ! உடல் கருகி இறந்த 14 பேர்.. ஜார்க்கண்ட்டில் சோகம்
இந்த தீ விபத்தில் பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத்தில் அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில தலைநகர் ராஞ்சியிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள தன்பாத் நகரின் ஜோரபைடக் பகுதியில் 13 தளங்களை கொண்ட 'ஆஷிர்வாத் டவர்' அமைந்திருக்கிறது. இந்த அப்பார்ட்மென்ட்டில் நேற்று மாலை திடீரென தீபிடிக்க தொடங்கியுள்ளது. சிறிது நேரத்திற்கெல்லாம் மளமளவென பற்றி எரிய தொடங்கிய இந்த தீயானது, இரவு முழுவதும் எரிந்துள்ளது. தீயை அணைக்க சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தது. இதில் 10 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தன்பாத் நகரத்தின் துணை ஆணையர் சந்தீப் குமார் தெரிவித்துள்ளார்.
தீ பிடித்து எரிந்த கார்.. தலையில் காயத்துடன் ஓடிய பண்ட்.. விபத்து எப்படி நடந்தது? பரபர பின்னணி
விசாரணை
இந்த விபத்து குறித்து மாநிலத்தின் தலைமைச் செயலாளர் சுக்தேவ் சிங் கூறியதாவது, "இந்த விபத்து மாலை ஏற்பட்டு இரவு வரை நீண்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் ஒருபுறம் தீயை அணைக்க போராடிக்கொண்டே மறுபுறம் உள்ளிருப்பவர்களை மீட்கவும் முயற்சித்தனர். அந்த வகையில் 14 பேர் சடலமாகவும், 10 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களுக்கும் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தீ தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை காரணம் என்ன என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.
இரங்கல்
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, "தன்பாத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்துள்ளோர் விரைவில் குணமடைய வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
போர்க்கால அடிப்படையில்
அதேபோல விபத்து குறித்து பேசிய மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், "தீ விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்பது, அவர்களுக்கு உரிய சிகிச்சையளிப்பது என மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையிலான மீட்புப்பணியில் இறங்கி இருக்கிறது. இவையனைத்தையும் நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்" என்று கூறியுள்ளார். விபத்திலிருந்து உயிருடன் தப்பியவர்கள் கூறுகையில், "நாங்கள் எங்களது மகளின் திருமணத்திருக்கு தயாராகிக்கொண்டிருந்தோம். ஆனால் திடீரென ரூமில் புகை பரவியது. எங்கள் மகன் அவசரமாக வந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மீட்பு
நாங்கள் அனைவரும் கீழே செல்ல முடிவெடுத்தோம். ஆனால் புகை அதிகமாகி எங்கள் மூச்சை அடைத்தது. எனவே அங்கிருந்து நாங்கள் மொட்டை மாடிக்கு சென்றோம். பின்னர் காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் வந்து எங்களை பத்திரமாக மீட்டனர். திருமணத்திற்காக எங்களது வீட்டிற்கு பலர் வந்திருந்தனர். இதில் சிலரை காணவில்லை. அவர்களை தேடி வருகிறோம்" என்று கூறியுள்ளார். தீ விபத்தில் 10 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.