மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலேமின் பரோல் மனுவை நிராகரித்தது கமிஷனர் அலுவலகம்
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலேமின் பரோல் மனுவை நவி மும்பை கமிஷனர் அலுவலகம் நிராகரித்தது.
மும்பை: 1993-இல் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலேமின் பரோல் மனுவை கமிஷனர் அலுவலகம் நிராகரித்தது.
கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 257 கொல்லப்பட்டனர், 713 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை தடா நீதிமன்றம் விசாரணை செய்தது.
இந்த வழக்கில் 6 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அவர்களுள் முக்கிய குற்றவாளிகளான கரிமுல்லா கான் மற்றும் அபு சலேமுக்கு கடந்த ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அபு சலேம் நிழல் உலக தாதா தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராகிமுக்கு நெருக்கமானவர். இவர்தான் வெடிப்பொருள்களையும் ஆயுதங்களையும் திகியில் இருந்து மும்பை கொண்டு சென்றிருந்தார் என்பது நீதிமன்ற குற்றச்சாட்டு ஆகும்.
வெடிப்பொருள் கொண்டு வந்த வழக்கில் முஸ்தபா டோஸ்ஸா என்பவர் கடந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி மும்பையில் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இந்த நிலையில் மும்பையில் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபு சலேம் திருமணம் செய்து கொள்வதற்காக 45 நாட்கள் பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவை நவி மும்பை கமிஷனர் சையது பாஹர் கௌசரால் நிராகரிக்கப்பட்டது. இவரது பரோல் மனு 2-ஆவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.