லாட்டரியில் ரூ.3.5 கோடி விழுந்ததாக கூறி மும்பை பெண்ணிடம் ரூ.11.5 லட்சம் பறித்த 2 நைஜீரியர்கள் கைது
மும்பை: மும்பையை சேர்ந்த பெண் ஒருவருக்கு இங்கிலாந்து லாட்டரியில் ரூ.3.5 கோடி பரிசு விழுந்திருப்பதாகக் கூறி அவரிடம் ரூ.11.50 லட்சம் பணம் பறித்த நைஜீரியாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவைச் சேர்ந்த எஃப்பி வில்லியம் இஸே(35) மற்றும் இமானுவேல் (எ) ஜான் டிக்சன்(42) ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். அவர்கள் இங்கிலாந்து லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக புனே, பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள பலருக்கு இமெயில் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மும்பை மாஹிம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இல்லத்தரசியான அவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இந்நிலையில் தான் எஃப்பி, இமானுவேல் ஆகியோர் இங்கிலாந்து லாட்டரியில் ரூ.3.5 கோடி பணம், கார் விழுந்திருப்பதாக அந்த பெண்ணுக்கு இமெயில் அனுப்பினர். இந்த பரிசை பெற வேண்டுமானால் அவரின் முகவரி, வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி வைக்குமாறு கடந்த ஜனவரி மாதம் இமெயில் அனுப்பியுள்ளனர்.
இந்த இமெயிலை உண்மை என்று நம்பிய அந்த பெண்ணும் தனது முகவரி மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அனுப்பினார். இதையடுத்து பரிசு பணத்தை விடுவிக்க இங்கிலாந்து அரசுக்கு ரூ.4 லட்சம் அளிக்க வேண்டும். அதனால் அந்த தொகையை அனுப்பி வைக்குமாறு அந்த 2 பேரும் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணும் ரூ.4 லட்சம் அளித்துள்ளார். அதன் பிறகு அந்த 2 பேரும் அந்த பெண்ணின் பெயரில் போலி ஏ.டி.எம். கார்டு எடுத்து அனுப்பி வைத்து பணம் அதில் போடப்பட்டுவிட்டதாகக் கூறி மேலும் ரூ.4 லட்சம் கேட்டுள்ளனர். இந்த ரூ.4 லட்சம் ஸ்டாம்ப் வரி உள்ளிட்டவைக்காக என்று தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் அவர்கள் தெரிவித்ததை எல்லாம் நம்பி ஆறு மாதங்களில் ரூ.11.50 லட்சம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு தான் அவர் போலீசில் புகார் கொடுத்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எஃப்பி மற்றும் இமானுவேல், எஃப்பியின் இந்திய மனைவி மற்றும் 5 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 11 செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications