தமிழக தொழிலாளர்கள் கல் வீசி தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டோம்: ஆந்திர டி.எஸ்.பி திமிர் விளக்கம்
சென்னை: தமிழக தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காகவே அவர்களைச் சுட்டதாக ஆந்திர மாநில டி.எஸ்.பி. சீனிவாசலு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிவதாகக் கிடைத்த தகவலின் பேரில் நேற்று அதிகாலை அம்மாநில போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது 20 தமிழக தொழிலாளர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆந்திராவுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையமும் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இந்நிலையில், இக்கொடூரத் தாக்குதல் தொடர்பாக அம்மாநில செம்மரக் கடத்தல் பிரிவு டி.எஸ்.பி.சீனிவாசலு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
நேற்று முன்தினம் இரவு, வேலூர், திருவண்ணாமலை, சேலத்தைச் சேர்ந்தவர்கள் செம்மரம் வெட்டுவதற்காக காட்டிற்கு வருவதாக தகவல் கிடைத்தது. எனவே, வன துறையினர் மற்றும் சிறப்பு படையினர் 50 பேர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மரம் வெட்ட சென்று கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை தடுத்த போது, அவர்கள் எங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதில், மூன்று காவலர்கள் காயமடைந்தனர். எங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினோம். ஏற்கனவே எங்களுக்கு அரசு துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி வழங்கி உள்ளது' என்றார்.