முற்றும் மோதல்! மம்தாவின் உதவியாளர் திடீர் கைது! 2020 கால்நடை கடத்தல் வழக்கில் அதிரடி காட்டிய சிபிஐ
கொல்கத்தா: இந்தியா-வங்கதேசம் இடையே எல்லைகளை கடந்து கால்நடை கடத்தியதாக 2020ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியின் உதவியாளரை இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை துன்புறுத்துவதாக மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

மம்தா பானர்ஜியின் உதவியாளர் கைது
இந்நிலையில் தான் மம்தா பானர்ஜியின் உதவியாளராக அறியப்படும் நபர் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்ட தலைவர் அனுபிரதா மொண்டலை இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். பீர்பூம் மாவட்டத்தில் உள்ள போல்பூரில் அமைந்து இருக்கும் அனுபிரதா மொண்டலின் வீட்டுக்கு இன்று காலை சென்ற அதிகாரிகள் அவரிடம் 2 மணிநேரம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவரை கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.

காரணம் என்ன?
முன்னதாக இந்திய -வங்கதேச எல்லைகளை கடந்து கால்நடை கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. 2015 முதல் 2017 காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் கால்நடைகள் எல்லை பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மிகப்பெரிய அளவில் எல்லைகளை கடந்து கால்நடை கடத்தல் நடப்பதாக சந்கேம் எழுந்தது. இதுதொடர்பாக இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 2020ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தான் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணையை புறக்கணித்ததால் கைது
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே தான் விசாரணைக்கு ஆஜராகக்கோரி அனுபிரதா மொண்டலுக்கு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் உடல் நலக்குறைவு எனக்கூறி தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார். 10க்கும் அதிகமான சம்மனை அவர் புறக்கணித்த நிலையில் தான் இன்று சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

அணிவகுத்த கார்கள்
அனுபிரதா மொண்டலை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் 30 கார்களில் வந்திருந்தனர். இதனால் காலை முதலே அவரது வீட்டு முன்பு கூட்டம் கூடி பரபரப்பான சூழல் நிலவியது. முன்னதாக அனுபிரதா மொண்டலின் பாதுகாவலராக சாய்கால் உசேன் என்பவரும் கைது செய்யப்பட்டார். அதோடு சமீபத்தில் வழக்கு தொடர்பாக மாநிலத்தின் பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரை தொடர்ந்து உதவியாளர்
மேற்கு வங்கத்தில் ஏற்கனவே ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக தற்பாது சிபிஐயால் அனுபிரதா மொண்டல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications