நிதிஷ், ஹேமந்த் சோரனுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திப்போம் என சொன்ன மமதா- ஸ்டாலின் பேரை சொல்லலையே?
கொல்கத்தா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து சந்திப்போம் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பட்டியலில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை மமதா பானர்ஜி சேர்க்காதது யதேச்சையானதா? அல்லது வேறு காரணம் இருக்கிறதா? என்பது விவாதமாகி இருக்கிறது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஜூரம் இப்போதே அரசியல் கட்சிகளுக்கு ஏற்படத் தொடங்கிவிட்டது. லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
”அன்றும், இன்றும் ஒரே கோரிக்கை தான்” ராகுல் காந்தியை சந்தித்த அனிதா சகோதரர் பேட்டி!
காங்கிரஸ் வியூகம்
இந்த பாதயாத்திரை காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஒருவித புத்துணர்வைத் தரும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. அதேநேரத்தில் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக காங்கிரஸ் தம்மை மீண்டு மீண்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சி பெறக் கூடிய இடங்களை எந்த மாநிலக் கட்சியாலும் வாங்க முடியாது என சீண்டி இருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
எதிர்க்கட்சிகள் ஒற்றுமை
இன்னொரு பக்கம், பாஜகவுக்கு எதிரான அத்தனை மாநில கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான கேசிஆர் என்ற சந்திரசேகர ராவ், பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் என பலரும் இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். டெல்லி சென்றிருந்த நிதிஷ்குமார், பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினார். இதுவரை எதிர்க்கட்சிகளுடன் இணையாத ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் இப்போது இந்த சந்திப்புகளில் இடம்பெற்று வருகிறார்.
மமதா பானர்ஜியின் பேட்டியால் சர்ச்சை
இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களை மமதா பானர்ஜி சந்தித்தார். இச்சந்திப்பின் போது, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். அகிலேஷ், ஹேமந்த், நிதிஷ் என அனைவரும் ஒருங்கிணைந்து நிற்கிறோம். அரசியல் என்பது போர்க்களம். நாங்கள் 34 ஆண்டுகளாக யுத்தம் நடத்தி வருகிறோம். திரிணாமுல் தலைவர்கள், அமைச்சர்களை கைது செய்துவிட்டாலே தொண்டர்கள் விரக்தி அடைவார்கள் என தப்புக் கணக்கு போடுகிறது பாஜக. டெல்லியில் நேதாஜி சிலை திறப்பு விழாவின் போது 6 மணிக்கே நான் அங்கே இருக்க வேண்டும் என மத்திய அரசு செயலாளர் ஒருவர் கடிதம் அனுப்பினார். நான் என்ன கொத்தடிமையா? என்றார்.
ஆம் ஆத்மி காரணமா?
இப்படி அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், நிதிஷ்குமார் என முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் குறிப்பிட்டுச் சொன்ன மமதா பானர்ஜி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சொல்லவில்லை. இது யதேச்சையானதாகவும் கூட இருந்திருக்கலாம். ஆனால் நிதிஷ், ஹேமந்த் வரிசையில் முதல்வர் ஸ்டாலின் பெயர் இடம்பெறாதது பல விவாதங்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆம் ஆத்மி கட்சியுடன் திமுக திடீரென இணக்கமான சூழ்நிலையை காட்டுவதை பிற எதிர்க்கட்சிகள் விரும்பவில்லையா? என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் இந்த விவாதங்களின் மையப்புள்ளியாகவும் இருந்து வருகிறது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.