26/11 தாக்குதல் வழக்கில் மோடியை தவிர ஆர்வம் காட்டாத அரசியல் தலைவர்கள், கட்சிகள்
டெல்லி: 26/11 தாக்குதலுக்கு பிறகு பல புத்தகங்கள் எழுதப்பட்ட போதிலும் பிரஜைல் பிரான்டியர்ஸ்: தி சீக்ரெட் ஹிஸ்டரி ஆப் மும்பை டெரர் அட்டாக்ஸ் என்ற புதத்கம் தான் தாக்குதலுக்கு திட்டம் போட்டதில் இருந்து அதை நிறைவேற்றியது வரை ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக தெரிவித்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஸ்ரீ ஆரோபிந்தோ கல்லூரியில்(மாலை) துணை பேராசிரியராக இருக்கும் சரோஜ் குமார் ரத் என்பவர் தான் தீவிர ஆய்வுக்கு பிறகு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சரோஜ் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் மோடி ஆர்வம் காட்டியபோதிலும் மகாராஷ்டிரா அரசு பேசியே அவரை அடக்கியது, தாக்குதல் பற்றிய விசாரணை உள்ளிடவை குறித்து தெரிவித்துள்ளார்.
26/11 தாக்குதல் நடந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய உறுதி எவ்வாறு வேறுபட்டுள்ளது?
அடிப்படைகள் எல்லாம் ஒன்றுதான். 26/11 தாக்குதலுக்கு முன்பும் பின்பும் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்டவை மாநில தலைப்பு ஆகும். ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் மாநில போலீசாரை நாம் யாரும் நம்புவது இல்லை. தீவிரவாத தாக்குதல்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் அளவுக்கு மாநில போலீசாருக்கு பயிற்சோ, சக்தியோ இல்லை. சென்னை முதல் ஸ்ரீநகர் வரை ஒவ்வொரு தாக்குதலுக்கு பிறகும் மாநில அரசு மத்திய பாதுகாப்பு படைகளை அழைத்து தீவிரவாதிகளை பிடிக்குமாறும், விசாரணை நடத்துமாறும் கூறுகிறது. இதை எல்லாம் பார்த்து தான் மக்கள் மாநில போலீசாரால் நம்மை பாதுகாக்க முடியாது என்று நினைக்கிறார்கள்.
சாந்தினி சவுக்கில் உள்ள சிறிய திருட்டுகள் செய்யும் திருடனை கவனிப்பது போன்றே 26/11 தாக்குதல் தீவிரவாதிகளையும் சட்டம் பார்த்தது. நம்முடைய இந்த வலிமையில்லா சட்டம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியாது.
மத்திய உள்துறை அமைச்சக தகவலின்படி கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இதுவரை 1,171 பேரை தீவிரவாதத்திற்கு பலியாகியுள்ளனர். மேலும் கடந்த 6 ஆண்டுகளில் 734 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
நம் நாட்டில் தற்போதும் தீவிரவாதிகள் சுற்றிக் கொண்டு தான் உள்ளனர் என்பதற்கு புர்த்வான் குண்டுவெடிப்பு ஒரு எடுத்துக்காட்டு. தீவிரவாதத்தை எதிர்த்து போராட நம் போலீசார் மற்றும் நீதித் துறையின் திறனை மேம்படுத்த வேண்டும்.
இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அமைப்பாக லஷ்கர் இ தொய்பா தொடர்ந்து உள்ளதா?
ஆமாம். கடந்த சில ஆண்டுகளில் லஷ்கர் இ தொய்பா மிகவும் வளர்ந்துள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்படும் அளவுக்கு அந்த அமைப்பு வளர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஹக்கானி நெட்வொர்க்குடனும், இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன், வஹாபி தீவிரவாதிகளுடன் லஷ்கர் இ தொய்பா கை கோர்த்துள்ளது.
இந்தியாவை மையப்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் வியூகம் வகுப்பதில் ஹபீஸ் சயீது கலந்து கொள்கிறார். பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீ்க்கப்பட்டு பல காலம் ஆகிறது.
இந்தியாவில் அல் கொய்தா கிளை துவங்கும் அறிவிப்பு, ஐ.எஸ்.ஐ.எஸ். வளர்ச்சி நம் நாட்டை அபாயகரமான இடமாக ஆக்கியுள்ளதா?
வெறும் அறிவிப்பால் ஒன்றும் இல்லை. நம் பாதுகாப்பு படையினர் அல் கொய்தாவின் நேரடி தலையீடு உள்ளதா என்று பார்க்கிறார்கள். தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியில் அல் கொய்தா செயல்பட உதவுகிறது. பாகிஸ்தான் பயிற்சி மையங்கள், பதுங்கு இடங்கள் உள்ளிட்டவற்றை தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான், ஹக்கானி நெட்வொர்க், அல் கொய்தா ஆகியவை பகிர்ந்து கொள்கின்றன. புர்த்வான் குண்டுவெடிப்பில் தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதால் இந்தியாவில் அல் கொய்தா இருப்பதை மறுக்க முடியாது.
ஏற்கனவே தீவிரவாதிகளால் பிரச்சனையை சந்தித்து வரும் இந்தியாவில் தற்போது வந்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இந்தியா அதற்கு ஒத்து வராவிட்டாலும் அது இங்கிருந்து ஆட்களை தங்களை அமைப்பில் சேர்க்க அல் கொய்தாவுடன் போட்டியிடும். இந்த போட்டி ஏற்கனவே துவங்கிவிட்டது.
26/11 தாக்குதலில் சாஜித் மிர் என்பருக்கு தொடர்பு உள்ளது பற்றி?
லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த சாஜித் மஜித் என்ற சாஜித் மிர் என்பவருக்கு 26/11 தாக்குதலில் முக்கிய பங்கு உள்ளது. லஷ்கர் இ தொய்பா அமைப்பின் சர்வதேச தலைவரான அவரிடம் பல நாட்டு பாஸ்போர்ட்கள் உள்ளன. அவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அடிக்கடி முகத்தை மாற்றிக் கொள்வார். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது அவர் 2 முறை இந்தியாவுக்கு கூட வந்துள்ளார். ஒரு முறை அவர் துபாயில் கைது செய்ய்பட்ட போதிலும் அவருக்கு உள்ள பெரிய ஆட்களின் தொடர்பால் விடுதலை செய்யப்பட்டார்.
ஐ.எஸ்.ஐ. தலைவர் ஜெனரல் சுஜா பாஷா ஆதியலா சிறையில் ஜகி உர் ரஹ்மானை சந்தித்து 26/11 தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா, ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இல்லை இது அல் கொய்தாவின் வேலை என்று கூறுமாறு தெரிவித்ததை(ஹெட்லி மூலம்) உலகிற்கு அறிவித்தவர் சாஜித் மிர்.
26/11 தாக்குதலில் நேரடி தொடர்பு உள்ளதற்காக சாஜித் மிருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி பிறப்பித்தது.
தங்கள் மண்ணில் வசித்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோர் மீது பாகிஸ்தான் ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா?
ஹபீஸ் சயீத், ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் செய்யது சலாஹுத்தீன் உள்ளிட்ட ஏராளமான தீவிரவாதிகள் கராச்சியில் இருந்து முசாபர்பாத் வரை சுதந்திரமாக சுற்றுவதோடு இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களை மேற்பார்வையிடுகிறார்கள். பாகிஸ்தானில் பிரச்சனை செய்யாதவர்களுக்கு எதிராக அந்நாட்டு பாதுகாப்பு மையம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது போன்று 26/11 தாக்குதலுக்கு பிறகு இந்தியா எடுத்துள்ளதா?
26/11 தாக்குதல் பற்றி புரிந்துகொள்ளவே நாம் முயற்சிக்கவில்லை இதில் அமெரிக்கா போன்று நடவடிக்கை எடுப்பதா. 26/11 தாக்குதலுக்கு பிறகும் நம் அரசியல்வாதிகள், போலீசார், நீதித் துறை அப்படியே உள்ளது. ஆனால் அமெரிக்காவோ 9/11 தாக்குதலுக்கு பிறகு அதற்கு மட்டும் அல்லாமல் உலகிற்கும் புதிய காலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
26/11 தாக்குதலுக்கு பிறகு நம் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதா என்று சட்ட அதிகாரிகளாலேயே தெரிவிக்க முடியாது.
உங்களின் ஆய்வின்போது உள்ளூர் ஆட்களின் தொடர்பு வெளியே வந்துவிடாமல் இருக்க எந்த ஒரு அரசியல் கட்சியாவது முயற்சி செய்தது தெரிய வந்ததா?
மும்பை தாக்குதல் வழக்கில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை. 2008ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி நடந்த தாக்குதலின்போது அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மும்பை வந்தார். ஆனால் மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பேசியே அவரை அடக்கிவிட்டார்.
26/11 குற்றவாளிகளை நீதிக்கு முன்பு கொண்டு வர டெல்லியில் உள்ள புதிய அரசு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்குமா?
அது என்ன பாகிஸ்தானை மட்டும் சொல்வது. 26/11 குற்றவாளிகளை பாதுகாப்பதில் அமெரிக்காவுக்கும் சம பங்கு உள்ளது. மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி அமெரிக்க சிறையில் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?
மூன்று மாதத்திற்குள் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவை மூன்று முறை சந்தித்துவிட்டார். ஆனால் அவர் இந்த விஷயம் பற்றி ஒபாமாவுடன் பேசவில்லை. குற்றவாளிகளை நாடு கடத்துவது பற்றி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதில் பாகிஸ்தானுக்கு எப்படி அழுத்தம் கொடுப்பது.
தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதிகளை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கொன்று வருகின்றன. அது போன்ற கொள்கையை இங்கு கொண்டு வர பல காலம் ஆகும்.