மகாராஷ்டிராவில் ஆலங்கட்டி மழை: 28 பேர் பலி… பல லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த பதினைந்து நாளாக பெய்து வரும் கடுமையான ஆலங்கட்டி மழையினால் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல லட்சம் ஹெக்டேர் அளவிற்கு விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் உள்ள 35 மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால் 18,200 வீடுகள் சேதமடைந்துள்ளன. சிறியதும், பெரியதுமாக கற்கள் விழுவதால் கடலோரா மாவட்டங்களில் மக்களும், வீட்டு விலங்குகளும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. 9000 கால்நடைகள் வரை உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 பேர் பலி
மழைக்கு இதுவரை நாக்பூர் மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாக்பூர் மாவட்டத்தில் 6 பேரும், பூனேயில் மூன்று பேரும் நாசிக், அமராவதி பகுதிகளில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விவசாய நிலங்கள் சேதம்
மழையால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 13,70,326 ஹெக்டேர் அளவிற்கு விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.
காய்கறிகள் நாசம்
அங்குள்ள யாவத்மால் மாவட்டத்தில் இதுவரை 87881 ஹெக்டேர் பரப்பளவிலான கோதுமை மற்றும் பருப்பு பயிர்கள் மற்றும் 1036 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்கள் நாசமடைந்துள்ளன. 882 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பழவகைகளும் இம்மழையினால் கடுமையாக சேதமடைந்துள்ளன.
ஆலங்கட்டி மழை
அதிகபட்சமாக புசத் பகுதியில் 22000 ஹெக்டேர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என்று அம்மாவட்ட வேளாண்துறை அதிகாரி டி.ஐ.கெய்க்வாட் தெரிவித்தார்
இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அஷ்வின் மட்கல் கூறுகையில், "இம்மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாக்களும் ஆலங்கட்டி மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி விவசாய மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
விவசாயிகளுக்கு நிவாரணம்
விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்குவது மாநில அரசின் கடமை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இன்னும் இருதினங்களில் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.