28 வயது இளைஞருக்கு 8 பைபாஸ் சர்ஜரிகள்: மும்பை மருத்துவர்கள் சாதனை
மும்பை: மும்பையைச் சேர்ந்த 28 வயது இன்ஜினியர் ஒருவருக்கு சுமார் எட்டு பைபாஸ் சர்ஜரிகள் செய்யப் பட்டுள்ளது. இதுவே மிகக் குறைந்த வயதினர் ஒருவருக்கு மேற்கொள்ளப் பட்ட அதிகப் படியான பைபாஸ் அறுவைச் சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இளம் வயதினருக்கு இதயக் குழாய்களில் இரண்டு அடைப்புகள் இருப்பதே அரிதான விஷயம் என மருத்துவ உலகம் சொல்கிறது. ஆனால், மும்பையைச் செர்ந்த பிரசாந்த் பவார் என்ற 28 வயது இன்ஜினியருக்கோ அரிதிலும் அரிதாக 7 அடைப்புகள் காணப்பட்டுள்ளது. பொதுவாக இத்தைய அடைப்புகள் 70 வயதாகும் மனிதர்களுக்குத் தான் ஏற்பட வேண்டும் என மருத்துவ உலகம் சொல்கிறது.
பவாருக்கு உள்ள ஏஔ அடைப்புகளில் மூன்று அடைப்புகள் 40 சதவீதமும், மூன்று அடைப்புகள் 70 சதவீதமும் மற்றும் ஒரு அடைப்பு நூறு சதவீதமும் இருந்தது மருத்துவ சோதனையில் கண்டறியப் பட்டது. பவாருக்கு மரபு ரீதியான இதய நோய் பாதிப்பும் இருந்துள்ளது. அவரது தந்தை 50 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு தான் காலமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மும்பை மருத்துவமனையில் பவானுக்கு எட்டு பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இது குறித்து பவாருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கூறுகையில், ‘இது போன்ற இதய அடைப்புகள் இளைஞர்களுக்கு ஏற்படுவது மிகவும் அசாதாரணமான ஒன்று. மோசமான வாழ்க்கை முறை மற்றும் மரபணுக்கள் கூட இதற்கு காரணமாகின்றன. குறைந்த கொழுப்புள்ள உணவுகள் மற்றும் சரியான உடற்பயிற்சி மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நல்லது' என அறிவுறுத்தியுள்ளனர்.