2ஜி ஸ்பெக்ட்ரம்: குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய கோரி கனிமொழி மனு-சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் புகாரில், முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்பட 17 பேர் மீது வழக்கு உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பு சாட்சிகள் 153 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி, கடந்த நவம்பர் மாதம் முடிவடைந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வது தொடர்பாக கேள்விப்பட்டியல் தயாராக இல்லை என்பதால், மார்ச் 3-ந்தேதிக்கு வாக்குமூலம் பதிவை தள்ளி வைப்பதாக, தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி திங்கட்கிழமையன்று உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தன் மீது சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதிகள் எச்.எல்.தத்து, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை கொண்டு உச்சநீதிமன்ற அமர்வு முன்பு செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘‘குற்றச்சாட்டு பதிவை எதிர்த்து வழக்கு தொடருவதற்கு 3 ஆண்டுகள் தாமதம் ஆனதற்கு தாங்கள் பொறுப்பல்ல. ஏனென்றால் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி தாக்கல் செய்த மனுவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததே காரணம்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனு மீது 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி சி.பி.ஐ., மத்திய அரசு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டனர்.
டெல்லியில் உள்ள பொதுநல வழக்கு மையம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்த தொண்டு நிறுவனத்துக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்கும்படி, உத்தரவிடப்பட்டு உள்ளது.