பெங்களூர் கலவரத்தில் தினம் ஒரு திருப்பம்.. வன்முறையில் ஈடுபட்டதாக 4 'தமிழர்கள்' கைது
பெங்களூர்: காவிரிக்காக கடந்த 12ம் தேதி பெங்களூரில் நடந்த பெரும் கலவர சம்பவ விசாரணை தினமும் ஒரு திருப்பத்தோடு பயணித்துக் கொண்டுள்ளது.
பெங்களூரில் கடந்த 12ம் தேதி, காவிரி நதிநீர் தொடர்பாக, பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தில் தமிழக வாகனங்கள் குறி வைத்து எரிக்கப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே 16 காவல் நிலைய சரகங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெங்களூர் நகரில் வரும் 25ம் தேதிவரை, 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஊரடங்கு உத்தரவு இரு தினங்கள் முன்பு தளர்த்தப்பட்டது. இந்த கலவரம் பெங்களூர் நகருக்கு உலக அளவில் கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்துவிட்டது.
கொள்ளைகள்
காவிரி கலவரத்தை, சமூக விரோதிகள் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டதாக போலீசாருக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நிறுவ உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவங்கள் அரங்கேறின. கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவங்களை கன்னட பத்திரிகையொன்று சிசிடிவி ஆதாரங்களோடு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம்
இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலில் பெங்களூர் வாழ் தமிழர்கள் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. ராஜாஜிநகரிலுள்ள மங்களூர் ரிபைனரி அன்டு பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் சூறையாடியது தொடர்பாக திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வர் கைது
பெங்களூரில் வசித்து வரும், அருள் 23, சத்யா 20, செல்வா 31, ஸ்டீபன் ராஜ் 22 ஆகியோர் கைது செய்யப்பட்ட தமிழர்களாகும். அருள் மேளம் அடிப்பவர், சத்யா, தினக்கூலி, செல்வா செல்போன் ஸ்டோரில் வேலை பார்க்கிறார். ஸ்டீபன் ராஜ் பெங்களூர் நகர போலீசாரின் ரவுடி பட்டியலில் இடம்பிடித்தவர். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பெற்றோர் மறுப்பு
கலவர நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்களில் இவர்கள் முகம் பதிவானதை வைத்து போலீசார் கைது செய்து சிறைக்குள் தள்ளியுள்ளனர். அதேநேரம், கைதானவர்கள் குடும்பத்தார் நிருபர்களிடம் கூறுகையில், போலீசார் தவறுதலாக கைது செய்திருப்பார்கள். அல்லது கன்னட அமைப்பினரின் மிரட்டலுக்கு பயந்து அவர்களும் வன்முறையில் ஈடுபட்டிருக்க கூடும் என்று தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை குடும்பத்தாருடன் பேச போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.