டெல்லியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: வடமேற்கு டெல்லியில் உள்ள கேஷவ்புரத்தில் இருக்கும் குடிசைப் பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு டெல்லியில் உள்ள கேஷவ்புரத்தில் இருக்கும் குடிசைப் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் ஒருவரின் 4 வயது மகள் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீர் என காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவர் அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே இருக்கும் புதர் ஒன்றில் அழுதபடி கிடந்ததை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து ரத்தப்போக்குடன் கிடந்த சிறுமியை மீட்டு மகாவிர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமியின் மர்ம உறுப்பில் காயம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதற்கிடையே போலீசார் இநத் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியை பலாத்காரம் செய்த நபரை தேடி வருகிறார்கள்.