டெல்லி தேர்தலில் கெஜ்ரிவால் ஏன் மோடிக்கு சிம்மசொப்பனமாக இருப்பார்?
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி மாதம் 10ம் தேதி நடைபெறுகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுக்கும், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தான் நேரடி மோதல் என்று கூறப்படுகிறது.
டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி தான் சிம்மசொப்பனமாக இருக்கும். அதற்கான காரணங்கள்,
கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும், முதல்வர் வேட்பாளரையும் அறிவித்துவிட்டது. முதல்வர் வேட்பாளரான கெஜ்ரிவால் மாற்றத்தை கொண்டு வருவார் என்று டெல்லி மக்கள் இன்னும் நம்புகிறார்கள். கெஜ்ரிவாலுக்கு எதிராக யாரை நிறுத்துவது என்று பாஜக ஆலோசித்து வருகிறது.
ஆம் ஆத்மி
டெல்லி தேர்தலை சந்திக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது. இந்த தேர்தலில் கவனம் செலுத்துவதற்காக ஆம் ஆத்மி கட்சி ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் போட்டியிடவில்லை. பாஜக அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட்டது. தற்போது டெல்லியிலும் போட்டியிட உள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜகவுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்
கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றாலும் அந்த தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி தான் இரண்டாவது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமா
49 நாட்களில் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. கடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 33 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக லோக்சபா தேர்தலில் 46 சதவீத வாக்குகள் பெற்றது. டெல்லி சட்டசபை தேர்தலில் 29 சதவீத வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலில் 33 சதவீத வாக்குகள் பெற்றது.
இளைஞர்கள்
இளைஞர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி பிரபலமாக உள்ளது. இந்த தேர்தலிலும் பாமரர்களும், இளைஞர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மோடி
மோடியும் சரி, கெஜ்ரிவாலும் சரி நச்சென்று பேசி மக்களை கவர்வதில் வல்லவர்கள். இருவருமே ஊழல் மற்றும் பாமர மக்களை பற்றி தான் பேசுகிறார்கள்.
சமூக வலைதளம்
மோடி ட்விட்டர், ஃபேஸ்புக் என்று சமூக வலைதளங்களின் மூலம் மக்களுடன் தொடர்பில் உள்ளார். கெஜ்ரிவாலும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் மக்களிடம் கலந்துரையாடுகிறார். மேலும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் சமூல வலைதளங்களை பயன்படுத்தி வருகிறது.