சக்சஸ்... ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிடுச்சாம்!!!
டெல்லி: கடந்த 26ம் தேதி வரை மட்டும் சுமார் 98.46 லட்சம் புதிய உறுப்பினர்களைப் பெற்றதன் மூலம் ஆம் ஆத்மிக் கட்சி, அதன் பழைய உறுப்பினர்களையும் சேர்த்து அதன் இலக்கான ஒரு கோடியைத் தாண்டி, ஒரு கோடியே ஐந்து லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு மக்களிடையே நல்மதிப்பை பெற்றுள்ளது ஆம் ஆத்மி கட்சி. இந்நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு டெல்லி தவிர பிற மாநிலங்களிலும் தனது கட்சியினைப் பலப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது அக்கட்சி.
அதன்படி, பிற மாநிலங்களிலும் உறுப்பினர்களை சேர்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஜனவரி 26ம் தேதிக்குள் தங்களது கட்சியில் சுமார் ஒருகோடி பேரை இணைப்பதை இலக்காகக் கொள்ளப்பட்டது. அதற்கான ஆயத்த வேலைகளை இம்மாத ஆரம்பத்தில் தொடங்கியது அக்கட்சி.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சியில் சுமார் 98.46 லட்சம் மக்கள் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அக்கட்சித் தெரிவித்திருந்தது. இதன் மூலம் அதன் இலக்கான ஒரு கோடியைத் தாண்டி ஐந்து லட்சம் அதிகமாகவே உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவர் கோபால் ராய் தெரிவித்துள்ளதாவது :-
98 லட்சம்....
கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 98.46 லட்சமாக இருந்தது.
நேரடி விண்ணப்பம்....
இதில், நேரடி விண்ணப்பங்கள் மூலம் சுமார் 76 லட்சம் மக்களும், இணையத்தின் வாயிலாக 7 லட்சம் மக்களும் கட்சியில் இணைந்துள்ளனர்.
மிஸ்டுகால் உறுப்பினர்கள்....
மேலும், எஸ்.எம்.எஸ் வாயிலாக 5 லட்சம் மக்களும் மற்றும் மிஸ்டு கால் கொடுத்து 10 லடம் மக்களும் ஆம் ஆத்மியில் புதிய உறுப்பினர்களாகியுள்ளனர்.
தொடரும்....
புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெற்றி....
இந்நிலையில், ஜனவரி 10ம் தேதிக்கு முன்னரே ஆம் ஆத்மி கட்சியில் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் அங்கம் வகித்ததால் இந்தப் புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கையோடு சேர்த்து தங்களது கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி விட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இலவச உறுப்பினர் பதிவு....
ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலவச உறுப்பினர் பதிவு என்ற புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தியது ஆம் ஆத்மி. அதன்படி, நேரிலோ,இணையத்திலோ, எஸ்.எம்.எஸ் வாயிலாகவோ அல்லது மிஸ்டுகால் கொடுத்தோ அக்கட்சியில் உறுப்பினராகும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
போலி உறுப்பினர் அட்டைகள்....
அதனை தங்களுக்கு சாதகமாகப் பய்ன் படுத்திக் கொண்ட சில விஷமிகள் ஒபாமா, மோடி, ராகுல் காந்தி போன்ற பிரபலங்களின் பெயர்களில் ஆம் ஆத்மியில் உறுப்பினராக பெயரைப் பதிவு செய்தனர்.
விளக்கம்...
இது சமீபத்தில் அம்பலமானதைத் தொடர்ந்து உறுப்பினர் பட்டியலைச் சரிபார்க்க தனியாக ஒரு குழு நியமிக்கப் பட்டு, அம்மாதிரியான பொலியான முகவரியுள்ள பெயர்கள் நீக்கப் பட்டுள்ளதாக அக்கட்சி விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி நீக்கம்....
ஆம் ஆத்மியின் தற்போதைய உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம் ஆத்மியின் கொள்கைகளை பின்பற்றாதவர்களின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து உடனடியாக நீக்கப் படுவர் என ஆம் ஆத்மி எச்சரித்துள்ளது.