அரசியலின் 'குத்தாட்ட நாயகி' ஆம் ஆத்மி: எழுத்தாளர் சேத்தன் பகத் சாடல்
டெல்லி: இந்திய அரசியலின் 'குத்தாட்ட நாயகி' என்று ஆம் ஆத்மி கட்சியை, பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மேற்கொண்ட தர்ணா போராட்டத்தைக் கண்டித்த சேத்தன் பகத், ஆம் ஆத்மியின் இந்தச் செயலால், அக்கட்சியின் ஆதரவாளரான தாம் தலைகுனிவதாகத் தெரிவித்துள்ளார்.
என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், சேத்தன் பகத் கூறியதாவது:
"ஆம் ஆத்மி கட்சி எனது நம்பிக்கையை பொய்யாக்கிவிட்டது. இந்தப் போராட்டம், இதனால் கிடைத்த ஆதாயம் எதுவும் ஏற்புடையதாக இல்லை".
இந்தப் போராட்டத்தின் காரணமாக இரண்டு போலீசாருக்கு கட்டாய விடுப்பு அளிக்கபட்டுள்ளதை குறிப்பிட்ட சேத்தன் பகத், "இந்த தர்ணாவால் தலைநகரமே ஸ்தம்பித்தது, காவல் துறையினருக்கு பாதிப்பு ஏற்பட்டது, பலரது உணர்வுகள் புண்பட்டது.
மக்களவைத் தேர்தல் வருவதால், அவர்கள் (ஆம் ஆத்மி) தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் அவசரத்தில் உள்ளனர். மக்களது கவனம் தங்களுக்கு உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்பதால், குத்தாட்ட நடிகையைப் போல நடந்து கொள்கின்றனர்.
ஒரு நடிகைக்கு வாய்ப்புகள் சரியாக இல்லாதபோது, தன்னைப் பிரபலப்படுத்த குத்தாட்டப் பாடலில் அவர் நடிப்பதுண்டு. இந்திய அரசியலின் குத்தாட்ட நாயகி ஆகிவிட்டது ஆம் ஆத்மி கட்சி" என்றார் சேத்தன் பகத்.