350 தொகுதிகளில் போட்டியிடுகிறது ஆம் ஆத்மி... முதல் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் 350 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. தனது முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி டெல்லியில் வெளியிட்டது.
முதல் வேட்பாளர் பட்டியலில் வங்கியாளர் மீரா சன்யால், மாயங்க் காந்தி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானாவுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி முதல் கட்டமாக வெளியிட்டுள்ளது.
ஸ்காட்லாந்து வங்கித் தலைவர்
ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து வங்கியின் தலைமை செயலதிகாரியாக இருந்தவர் மீரா சன்யால். சமீபத்தில்தான் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆம் ஆத்மியில் இணைந்தார். அவர் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மேற்கு மும்பையில் மாயங்க் காந்தி
சமூக சேவகரான மாயங்க் காந்தி, வட மேற்கு மும்பையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை - நாக்பூர் - தானே
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மும்பை, நாக்பூர், தானே, புனே, நாசிக் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அது அறிவித்துள்ளது.
நாசிக்கிலிருந்து விஜய் பந்தரே
முன்னாள் அரசு பொறியாளரான விஜய் பந்தரே நாசிக் தொகுதியில் போட்டியிடவுள்ளார். துணை முதல்வர் அஜீத் பவாரின் பதவிக்கு வேட்டு வைத்ததில் இந்த பந்தரேவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அஜீத் பவாரின் பெயர் நீர்ப்பாசன ஊழலில் பெரிய அளவில் அடிபட்டு அவர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். அஜீத் பவார், சரத் பவாரின் தம்பி.
டெல்லியில் 6 வேட்பாளர்கள்
டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. இதில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அது அறிவித்துள்ளது. வட மேற்கு டெல்லி தொகுதிக்கான வேட்பாளர் பெயர் வெளியிடப்படவில்லை.
டெல்லியில் சீட் கேட்டு அலை மோதல்
டெல்லி தொகுதிகளில் போட்டியிட சீட் கேட்டு கிட்டத்தட்ட 65க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனராம்.
ஹரியானாவில் 10 இடங்களில் போட்டி
ஹரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. இதில் சதீஷ் யாதவ் குர்கான் தொகுதியிலும், பரீதாபாத்தில் அமீத் பாதக்கும் போட்டியிடவுள்ளனர்.
வேட்பாளர் குறித்து கருத்துச் சொல்லுங்கள் மக்களே
இந்த வேட்பாளர்கள் குறித்து மக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறும் மக்களை ஆம் ஆத்மி கேட்டுக் கொண்டுள்ளது.
தற்காலிக வேட்பாளர்கள்தான்
இந்த வேட்பாளர்கள் இறுதியானவர்கள் அல்ல. இவர்கள் மீது ஏதேனும் புகார்கள் உள்ளிட்டவை வந்தால் நிச்சயம் வேட்பாளர்கள் மாற்றப்படுவார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட தொகுதிகளின் இறுதியான வேட்பாளர்கள் தெரிய வரும் என்றும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
350 தொகுதிகளில் போட்டியிட முடிவு
இதற்கிடையே, லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 350 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.