கெஜ்ரிவாலின் தர்ணா நாடகம் அரசியல் அமைப்பையே குலைத்து விட்டது: லாலு குற்றச்சாட்டு
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் போராட்ட நாடகம் அரசியல் அமைப்பையே குலைத்து விட்டதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டப் பட்ட டெல்லி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்மாநில முதல்வர் அவரது அமைச்சர்களுடன் நேற்று முன்தினம் போராட்டத்தில் இறங்கினார். சுமார் 30 மணி நேரம் நீடித்த அப்போராட்டம், பின்னர் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கேட்டுக்கொண்டதன் பேரில் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நடத்திய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :-
நாட்டில் இப்போது எல்லோரும் பிரதமராக ஆசைப்படுகிறார்கள். டெல்லி, நாட்டின் தலைநகர். அங்கு கெஜ்ரிவால் நடத்திய போராட்டத்தை பார்த்து, டெல்லி நகர மக்கள் மட்டும் அல்ல நாட்டின் பிறபகுதி மக்களும் எள்ளி நகையாடுகிறார்கள். பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திதான் தீர்வு காண வேண்டும்.
மேலும், கெஜ்ரிவால் நடவடிக்கைகளின் பின்னணியில் பெரிய சூழ்ச்சி உள்ளது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது பழி போட்டு, தங்களை பலப்படுத்திக் கொள்ள பார்க்கிறார்கள். காங்கிரசை பலவீனமாக்க, அது ஒன்றும் மதவாத கட்சி அல்ல.
கெஜ்ரிவாலின் நாடகம் அரசியல் அமைப்பையே சீர்குலைத்து விட்டது. அவர் அளித்த வாக்குறுதிகளுக்காகத்தான், மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். அவற்றை நிறைவேற்ற முடியாததால் அவர் சாலையில் இறங்கி போராட தொடங்கி விட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications