கெஜ்ரிவாலின் டுவிட்டர் வேண்டுகோள் எதிரொலி... 2 நாளில் ரூ. 1 கோடியை தாண்டிய நன்கொடை!
வாரணாசி: ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடையாக கடந்த இரண்டு நாளில் மட்டும் ரூ.1 கோடியை தாண்டி வந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
16 வது லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக போட்டியிடும் தங்களுக்கு நிதியுதவி செய்யும்படி 2 நாட்களுக்கு முன் டுவிட்டர் மூலமாக பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் கெஜ்ரிவால்.
அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாளில் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக நிதியுதவி கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:
ஒரு கோடியைத் தாண்டியது....
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆம் ஆத்மிக்கு ரூ.1 கோடிக்கு மேல் நிதியுதவி கிடைத்துள்ளது.
ஒரே நாளில் ரூ 80 லட்சம்...
நேற்று முன்தினம் ரூ.80 லட்சமும், நேற்று ரூ.35 லட்சமும் நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளோம்.
அயல்நாட்டு ஆதரவாளார்கள்....
இந்த நிதி இந்தியாவில் இருந்தும், சிங்கப்பூர், அமெரிக்கா, பெல்ஜியம், ஓமன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இருந்தும் ஆம் ஆத்மியின் ஆதரவாளர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
தமிழகத்தை சேர்ந்தவர் 1 லட்சம், இன்னொருவர் ரூ 10:
தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். மிக குறைந்த நிதியுதவியாக தொண்டர் ஒருவர் ரூ.10 தந்துள்ளார்' என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.