”வெற்று மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன்; வீறு கொண்டு எழுவேன்”- நடிகை ரோஜா
நகரி: நகரி தொகுதி எம்.எல்.ஏவான நடிகை ரோஜா தனக்கு அதிகளவில் கொலை மிரட்டல் வருவதாகவும், ஆனால் அவற்றிற்கெல்லாம் தான் பயப்படுவதில்லை என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்த தொகுதியில் கடந்த வருடம் நடந்த கங்கை அம்மன் கோவில் திருவிழாவில் ரோஜா தாக்கப்பட்டார். கையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. மேலும், கோவில் விழாவுக்கு ரோஜா வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
தற்போது அதே கோவிலில் இந்த வருடமும் திருவிழா நடக்கிறது. இதில் பங்கேற்க ரோஜா தனது கணவர் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி மற்றும் குழந்தைகளுடன் நேற்று நகரிக்கு வந்தார். அப்போது போலீசார் அவரிடம் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் கோவில் திருவிழாவுக்கு செல்லவேண்டாம் என்று தடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரோஜா, "நகரி தொகுதியில் உள்ள ஓர்குண்டளம்மா தேவதை மற்றும் கங்கை அம்மன் திருவிழாக்களில் வருடந்தோறும் பங்கேற்று வருகிறேன். ஆனால், என்னை இந்த விழாவுக்கு வரவிடாமல் தடுக்கிறார்கள். போனில் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். போலீசார் என்னிடம் விழாவுக்கு வரவேண்டாம் என்கிறார்கள்.
சாமியை வழிபடுவது என் உரிமை. பதட்டமாக இருந்தால் எனக்கு பாதுகாப்பு தரவேண்டியது போலீசார் கடமை. அதை விடுத்து வரவேண்டாம் என்று தடுப்பது நியாயம் இல்லை. எனக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்.
நான் உயிருக்கு பயப்படமாட்டேன். என்னை தாக்கினால், பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன்" என்று கூறினார்.
இதுகுறித்து ரோஜாவின் கணவர் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி கூறும்போது, ‘‘என் மனைவிக்கு கடவுள் பக்தி அதிகம். ஏழைகள் மீதும் அக்கறை உள்ளவர். ஏழைகள் வீட்டில்தான் சாப்பிடுகிறார். முற்போக்கு எண்ணம் கொண்டவர். அதனால்தான் அவரை அரசியலில் ஈடுபட அனுமதித்துள்ளேன். ஆனால், அவருக்கு கொலைமிரட்டல்கள் விடுக்கிறார்கள். ரோஜாவுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டால், பெண்கள் அரசியலுக்கு வரவே பயப்படுவார்கள்'' என்றார்.