வன்மத்த கக்கிட்டேவா இருப்பீங்க! சந்திரபாபு, பவன் குறித்து அவதூறு.. ஸ்ரீ ரெட்டி மீது பாய்ந்த வழக்கு!
அமராவதி: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி சர்ச்சையில் சிக்கியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனர்கள் நடிகர்கள் பாலியல் ரீதியாக தன்னை வன்கொடுமை செய்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தெலுங்கில் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மட்டுமல்லாது தமிழில் இயக்குனர் முருகதாஸ், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீதும் தனது பேஸ்புக் பக்கத்தில் பாலியல் குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை ஹோட்டல் அறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பை கிளப்பி இருந்தார். இதற்கு விளக்கம் அளித்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீ ரெட்டி சொல்வது முற்றிலும் பொய் அவர் தவறு நடந்ததாக சொல்லப்படும் நேரத்தில் நான் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ரிபெல் படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன்" எனக் கூறியிருந்தார். இதனால் அந்த விவகாரம் அப்போது ஓய்ந்தது.
அதுமட்டுமில்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் பிரபல அரசியல்வாதி ஒருவர் குறித்தும் ஸ்ரீ ரெட்டி பேசிய நிலையில், அதன் பிறகு அந்த புகாரிலிருந்து பின் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது எதிர்க்கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சித்து வந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகரும் ஜனசேனா கட்சி தலைவரும் ஆன பவன் கல்யாண், தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அனிதா உள்ளிட்டவர் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஐடி விங் நிர்வாகிகள் அநாகரீகமாக சமூக வலைதளம் பதிவுகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போதே பல காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டது.
அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடு, அனிதா, பவன் கல்யாண் குறித்து நடிகை தொடர்ந்து அநாகரீக பதிவுகளை போட்டு வந்தார் ஸ்ரீ ரெட்டி. மேலும் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருக்கும் ராம்கோபால் வர்மா நடிகர் போசானி கிருஷ்ண முரளி ஆகியோரும், பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடுவை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஏற்கனவே அளித்த வழக்குகள் தூசி தட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிவாடா, அனகா பள்ளி, ராஜமுந்திரி பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து ஸ்ரீரெட்டி மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட இருக்கும் நிலையில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications