இரட்டை இலைக்கு லஞ்சம்: சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி தனி நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது.
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தியபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 70 லட்சம், இரு சொகுசு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்றதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அனைவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோர் 35 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்டவரான சுகேஷ் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கடந்த மே மாதம் 23ஆம் தேதி டெல்லி தனி நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி தள்ளுபடி செய்தார். ஜூன் 10 ஆம் தேதி இரண்டாவது முறையாக ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சுகேஷ் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. சுகேஷ் ஜாமீன் மனு 3வது முறையாக டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி போலீசார் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரர் முதன்மையாக குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். டிடிவி தினகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால் இவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
போலீசாரின் ஆவணங்களின் அடிப்படையில் இது தொடர்பாக நடந்த கூட்டுச்சதியில் மனுதாரர் ரூ.2 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அதில் ரூ.1.70 கோடி அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை அடிப்படை விஷயங்களில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூடியுள்ளது. மூன்றாவது முறையாக சுகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.