தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி: தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாநிலங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை கொட்டி வருகிறது. மும்பை நகரமே வெள்ளக்காடாகி மிதக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழை கொட்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு கடற்கரை மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவின் குடகு, ஹாசன், மைசூரு மாவட்டங்களிலும் கேரளாவின் வயநாடு மாவட்டத்திலும் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் காவிரி, பவானி, மோயார் ஆறுகளில் நீர் வரத்து அதிகம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.