காலை 11 மணிக்கு மேல் தேர்தல் டிரெண்ட் தெரிய ஆரம்பிக்கும்: வி.எஸ்.சம்பத்
டெல்லி: வேட்பாளர்களின் வெற்றி தோல்வி குறித்த சரியான டிரெண்ட் இன்று காலை 11 மணிக்கெல்லாம் தெரிய ஆரம்பிக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்தார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் சம்பத் கூறியதாவது:
பிரச்சாரத்தின்போது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் கடிவாளம்போட்டது. இதனால் சிலர் தேர்தல் கமிஷனுக்கு எதிராகவே குற்றம்சாட்டினர். ஆனால் வெறுப்பு பேச்சுக்கள் தடுக்கப்பட்டன. நான் 2009ம் ஆண்டு தேர்தல் கமிஷனில் பணிக்கு இணைந்தேன். அந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய வெறுப்பை உமிழும் பேச்சுக்களை ஒப்பிட்டால் இந்த தேர்தலில் அது குறைந்துள்ளது. வருங்காலங்களில் இது மேலும் குறையும்.
கடந்த சில வாரங்களில் எடுத்த நடவடிக்கைகளால் மட்டும் வாக்குப்பதிவு சதவீதம் கூடவில்லை. தேர்தல் கமிஷன் பல நெடுங்காலமாக வாக்காளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுத்ததன் விளைவாக வாக்கு சதவீதம் அதிகரித்தது. தகுதிவாய்ந்த அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பளித்தது தேர்தல் ஆணையம். நகரங்களில் ஆன்லைனில் வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வசதி செய்து கொடுத்தோம்.
கிராமங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதில் பெரும்பங்காற்றினர். தமிழ்நாட்டில் 81 சதவீதம் மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். இதுபோல எங்கெல்லாம் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்காளர்கள் உள்ளனரோ அங்கெல்லாம் மீண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படும். வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்கள் பெயர் ஏதாவது ஓரிடத்தில் இருந்து அகற்றப்படும்.
மும்பையின் மொத்த மக்கள் தொகையில், 90 சதவீதம் வாக்காளர்கள் இருந்தனர். எனவே போலிகளை டிலீட் செய்ததன் விளைவாக தற்போது மும்பையில் சரியான அளவில் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, 9 மணிக்கு மேல் முதல்கட்ட டிரெண்ட் வெளியாகும். காலை 11 மணிக்கெல்லாம் உறுதியான டிரெண்ட் தெரிந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.