கொரோனாவை பரப்பிவிட்ட கும்பமேளா போதாதாம்... இமயமலை யாத்திரைக்கும் அனுமதி கொடுத்தது உத்தரகாண்ட் அரசு
டேராடூன்: கொரோனா 2-வது அலை பல மாநிலங்களில் உச்சவேகத்தில் பரவுவதற்கு ஹரித்வார் கும்பமேளாவை நடத்தியதும் ஒரு காரணம். இந்த நிலையில் இமயமலையில் 4 புனித தலங்களுக்கான சார் தாம் யாத்திரைக்கும் உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் மோசமான நிலைமையை உருவாக்கி உள்ளது. உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகம்.
கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கொரோனா நோயாளிகளுக்கான மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
கொரோனா 2ஆம் அலையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.. தடுப்பூசி வதந்திகளை நம்பாதீர்கள்.. பிரதமர் மோடி பேச்சு
ஹரித்வார் கும்பமேளா
இப்படியான சூழலில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பல லட்சம் பேர் பங்கேற்ற இந்துக்களின் புனித நிகழ்வான கும்பமேளா நடத்தப்பட்டது. கொரோனா பரவலுக்கு மத்தியில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் பல லட்சம் பேர் ஹரித்வாரில் ஒன்று கூடியதால் கொரோனா பரவல் அதி உச்சத்தை அடைந்தது.
சர்ச்சை பேச்சு
ஆனால் உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத், ஹரித்வாரில் ஓடும் கங்கை மாதா தெய்வம் நம்மை காப்பாற்றும்ல் கொரோனா பாதிப்பு வராது என பேசினார். வேறுவழியே இல்லாமல் பிரதமர் மோடி தலையிட்டு சாதுக்களின் அமைப்புகளான அகாடாக்களின் தலைவர்களிடம் பேசி ஹரித்வாரை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் வைத்தார்.
திணறிய மாநில அரசுகள்
ஹரித்வாரில் இருந்து பல மாநிலங்களுக்கு திரும்பியவர்களால் கொரோனா பரவிவிட்டது. அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்தும் பல மாநில அரசுகள் ஹரித்வாரில் இருந்து திரும்பிய சாதுக்களை கண்காணிக்க முடியவில்லை.
இமயமலை யாத்திரை
இப்போது கொரோனா பரவல் அதி உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய 4 புனித தலங்களுக்கான சார் தாம் யாத்திரைக்கு உத்தரகாண்ட் அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் மிக மோசமாக இருக்கும் நிலையில் சார் தாம் யாத்திரைக்கு உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதித்திருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாக்கி உள்ளது.
மே 3 முதல் சார் தாம் யாத்திரை
ஆனால் உத்தரகாண்ட் மாநில அரசோ, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள்தான் அனுமதிக்கப்படுவர்; கட்டுப்பாடுகளை நாங்கள் விதித்திருக்கிறோம்; கொரோனா பரவாது என மீண்டும் விளக்கம் அளித்து வருவது குறிப்பிடத்தக்க்கது.