தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு.. உடலை கேட்கும் உறவுகள்... ஓய்ந்துவிடாத சர்ச்சை!
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு விவகாரம் அவ்வளவு எளிதில் ஓய்ந்துவிடாது.. அப்சல் குருவை தூக்கிலிட்டால் ஜம்மு காஷ்மீரில் பிரச்சனைகள் பெரிதாக வெடிக்கும் என்ற காரணத்திலேயே அவருக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது..
டெல்லி திஹார் சிறையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு 2 ஆண்டுகள் ஓடிவிட்டன.. இப்போது அப்சல் குருவின் உடலை ஒப்படைக் கோரி மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது...
சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரு கைதியின் உடலை ஒப்படைப்பது குறித்து பல விதிகள் இருக்கின்றன.. பொதுவாக தூக்கு தண்டனை கைதியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பது குறித்து அரசுடன் சிறைத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தலாம்..
அப்சல் குரு விவகாரத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கின் குற்றவாளி. அவர் குற்றவாளிதான் என்பதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததது. அவரது கருணை மனுவைக் கூட இந்திய ஜனாதிபதி நிராகரித்துவிட்டார்.
பொதுவாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் கைதியின் உறவினர்களிடம் உடலை ஒப்படைப்பதுதான் வழக்கம்.. ஆனால் அரசியல் ரீதியான வழக்குகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
ஏனெனில் அரசியல் ரீதியான வழக்குகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டோரின் உடலை ஒப்படைத்தால் அதை புனிதமானதாக வழிபடும் போக்கும் வெளிப்படும் என்பதும் ஒரு காரணம். இதனால்தான் ஒசாமா பின்லேடனின் உடலை அமெரிக்கா கடலில் தூக்கி எறிந்தது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட திகார் சிறையில் அவரது நினைவிடத்தில் இறுதி மரியாதைகளை செலுத்த அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. தூக்கிலிடப்பட்ட ஒருவரது உடலை ஒப்படைக் கோர உறவினர்களுக்கு உரிமை இருக்கிறது என்கிறது சிறை விதிகள்..
அதே நேரத்தில் சிறை விதிகளில் ஒன்று... "தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதியின் உறவினர்கள் எழுத்துப்பூர்வமாக உடலை ஒப்படைக்கக் கோரினால் சிறைத்துறை கண்காணிப்பாளர் இறுதி முடிவெடுக்கலாம்.. கைதியின் உடலை அடக்கம் செய்யும் போது போராட்டம் - ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தமாட்டோம் என்ற உறுதிமொழியை உறவினர்கள் தர வேண்டும் என்கிறது.
ஒருவேளை உறவினர்கள் அந்த உடலை வைத்து ஏதேனும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று சிறைக் கண்காணிப்பாளர் கருதினால் அவரே அனுமதி மறுக்கவும் உரிமை உண்டு. மேலும் மாவட்ட மாஜிஸ்திரேட்டுடன் கலந்து ஆலோசித்தும் முடிவெடுக்கலாம் என்கிறது சிறை விதி...
அப்சல் குரு விவகாரத்தில் அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்துவது குறித்து சிறை நிர்வாகம் முன்கூட்டியே தெரிவித்ததா? என்பதிலும் கூட சர்ச்சை இருக்கிறது.. ஒன்று கடிதம் மூலம் தெரிவித்திருக்க வேண்டும் அல்லது தொலைபேசி வழியாக பேசி உறுதி செய்திருக்க வேண்டும். கடிதம் அனுப்பியிருந்தால் அதில் 'மரண தண்டனை.. அவசரம்" என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டும்.. தொலைபேசியில் தெரிவித்தால் குறிப்பிட்ட சில அதிகாரிகளால் அது உறுதி செய்யப்பட வேண்டும் என்கிறது விதி..
எப்படியோ அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு 2 ஆண்டுகளாகிவிட்ட பின்னரும் சர்ச்சை மட்டும் ஓய்ந்துவிடவில்லை..