இராக்கில் விடுவிக்கப்பட்ட 46 நர்ஸ்கள் சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்தனர்!
மும்பை: இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட 45 கேரளா நர்ஸ்கள், ஒரு தமிழக நர்ஸ் ஆகியோர் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கொச்சி விமானம் வந்தடைந்த அவர்களை கேரள முதல்வர் உம்மன் சாண்டி மலர் கொத்துகள் கொடுத்து வரவேற்றார்.
அவர்களை இராக்கின் இர்பில் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இன்று அதிகாலை ஏற்றிக் கொண்டு கிளம்பியது.

இந்த விமானம் இன்று காலை 9 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த நர்ஸ்களுடன் 137 பயணிகளும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த விமானம் அங்கிருந்து கொச்சி கிளம்பிச் சென்றது. கொச்சியில் அனைத்து நர்ஸ்களும் தரையிறக்கப்பட்டனர்.
இவர்களை கேரள முதல்வர் உம்மன் சாண்டி விமான நிலையத்தில் மலர்க் கொத்துகள் கொடுத்து வரவேற்றார்.
முன்னதாக இவர்கள் திக்ரிக் நகரில் மருத்துவமனையில் பணியில் இருந்தனர். இராக்கை ஆக்கிரமித்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த நர்ஸ்களை பிணயக் கைதிகளாகப் பிடித்தனர். தீவிரவாதிகள் மீது இராக் படையினர் தாக்குதல் நடத்தியதையடுத்து நர்ஸ்களை அவர்கள் மொசுல் நகருக்குக் கடத்திச் சென்றனர்.
இந் நிலையில் இந்திய அரசு பல்வேறு வளைகுடா நாட்டு தூதரகங்கள் மூலம் பேச்சுவார்த்தைகளை நடத்தி நர்ஸ்களை மீட்க முயற்சி மேற்கொண்டது. இந் நிலையில் திடீரென நர்ஸ்கள் அனைவரையும் தீவிரவாதிகள் நேற்று விடுவித்தனர்.

இதையடுத்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இர்பில் நகருக்கு விரைந்தது. விடுவிக்கப்பட்ட நர்ஸ்கள் அனைவரையும் தீவிரவாதிகள் மொசுல் நகரில் இருந்து இர்பிலுக்கு கொண்டு வந்தனர்.
இன்று காலை இந்த நர்ஸ்களையும் இராக்கில் சிக்கித் தவித்து வந்த மேலும் 137 இந்தியத் தொழிலாளர்களையும் ஏற்றிக் கொண்டு இந்த விமானம் இந்தியா கிளம்பியது.
காலை 9 மணிக்கு இந்த விமானம் மும்பை விமானம் வந்தடைந்தது. பின்னர் இந்த விமானம் கொச்சி கிளம்பிச் சென்றது. இவர்களின் வருகைக்காக நர்ஸ்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கொச்சி விமான நிலையத்தில் ஆவலோடு காத்திருந்தனர்.
இவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த மோனிஷா என்ற தமிழக நர்ஸும் அடங்குவார்.
நர்ஸ்களை கொச்சியில் இறக்கிய பின் இந்த விமானம் மற்ற பயணிகளை ஹைதராபாத்திலும் டெல்லியிலும் தரையிறக்கும்.
மோனிஷாவின் தாய் எட்விஜயம்மாள் கூறுகையில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்து எனது மகள் மோனிஷா உள்ளிட்ட 46 பேரையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகளுக்கு மிக்க நன்றி. மோனிஷா பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என வேண்டி கொண்ட அனைவருக்கும் நன்றி என்றார்.
முன்னதாக திருச்செந்தூர் வந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மோனிஷாவின் எட்விஜயம்மாள் மற்றும் உறவினர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications