லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க விமானம் அனுப்பிய ஏர் இந்தியா
டெல்லி: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபாயிவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானம் ஒன்றை ஏர் இந்தியா துனிசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து தப்பித்து துனிசியாவுக்கு செல்கிறார்கள். அப்படி துனிசியாவுக்கு வருபவர்களை இந்தியா அழைத்து வர மீட்பு விமானத்தை அனுப்பி வைத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
இது குறித்து ஏர் இந்தியா கூறுகையில்,
லிபியாவில் இருந்து தப்பித்து துனிசியா வரும் இந்தியர்களை மீட்க டெல்லி-ஜெர்பா இடையே விமானம் இயக்கப்படுகிறது. தேவைப்படும் நேரத்தில் எல்லாம் ஏர் இந்தியா உதவ முன்வரும். இன்றும் கூட லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க விமானம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
துனிசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது போயிங் 777-200 எல்.ஆர். ரக விமானம் ஆகும். அதில் 238 பேர் பயணம் செய்யலாம். முன்னதாக லிபியாவில் சிக்கித் தவித்த கேரளாவைச் சேர்ந்த 44 நர்ஸுகள் செவ்வாய்க்கிழமை கொச்சி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.