மும்பை அருகே மூழ்கிய கப்பல்- சிக்கிய 20 மாலுமிகளும் உயிருடன் மீட்பு
மும்பை: மும்பை அருகே கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலில் சிக்கித் தவித்த 20 மாலுமிகளையும் இந்திய கடலோரக் காவல் படையினர் துணிகரமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டுள்ளனர்.
எம்.வி. பிரியங்கா என்ற அந்த சரக்குக் கப்பலானது, நேற்று முற்பகலில் மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் அருகே ரெவ்தந்தா துறைமுகத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் மோசமான வானிலை, கன மழை மற்றும் கடும் காற்றில் தத்தளித்து, நங்கூரம் அறுந்து கடலில் மூழ்கத் தொடங்கியது. அந்தக் கப்பலில் 20 மாலுமிகள் இருந்தனர். மேலும் கப்பலில் 1900 டன் இரும்புக் கம்பிகளும் இருந்தன.
கப்பலிருந்து உதவி கோரி கடலோரக் காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடலோரக் காவல் படையின் மீட்புக் கப்பல் அங்கு விரைந்து சென்றது. அவர்கள் கடுமையாக போராடி கப்பலில் சிக்கித் தவித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மீட்புப் பணிக்காக மும்பையிலிருந்து சேட்டக் ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டது. கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
கப்பலில் சிக்கியிருந்த 11 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். மற்ற 9 பேரும் உயிர் காக்கும் படகுகள் மூலம் கடலில் குதித்து விட்டனர். அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தற்போது மூழ்கி வரும் கப்பலை கடலோரக் காவல் படையினரும் மற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.