ஹெலிகாப்டர் ஊழல்: இத்தாலி நிறுவனத்துடனான புதிய ஒப்பந்தங்களை கிடப்பில் போட மத்திய அரசு உத்தரவு
டெல்லி: விவிஐபிக்கள் ஹெலிகாப்டர் பேர ஊழலில் தொடர்புடைய அகஸ்டாவெஸ்ட்லேண்டின் தாய் நிறுவனமான ஃபின்மெக்கானிக்காவுடனான அனைத்து புதிய ஒப்பந்தங்களையும் கிடப்பில் போடுமாறு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விவிஐபிக்களுக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு இத்தாலி நிறுவனமான ஃபின்மெக்கானிக்காவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்டுடன் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் அகஸ்டாவெஸ்ட்லேண்டுக்கு கிடைக்க லஞ்சம் வழங்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அகஸ்டாவெஸ்ட்லேண்டுடான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஃபின்மெக்கானிக்காவிடம் இருந்து எந்த பொருளையும் கொள்முதல் செய்யக் கூடாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அது அடுத்து உத்தரவிடும் வரை ஃபின்மெக்கானிக்காவிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்படாது.
இந்த உத்தரவை அடுத்து ஃபின்மெக்கானிக்கா மற்றும் அதன் துணை நிறுவனங்களிடம் இருந்து ஹெலிகாப்டர்கள், ரேடார்கள், கடற்படை துப்பாக்கிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்யும் திட்டங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொடர்புடைய அகஸ்டாவெஸ்ட்லேண்ட், ஐடிஎஸ் துனிசியா, ஐடிஎஸ் மொரீஷியஸ், ஐடிஎஸ் இன்போடெக், ஏரோமேட்ரிகிஸ் சொலுஷன்ஸ் லிமிடெட்(சன்டிகர்) ஆகிய நிறுவனகங்களுடன் எந்த ஒரு ஒப்பந்தமும் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications