மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியில்லை: அமித்ஷா திட்டவட்டம்
டெல்லி: மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கான தேர்தலில் பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிடாமல் பிரம்மாண்ட கூட்டணியை அமைக்கும் என்று அக்கட்சித் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தேர்தலில் எப்படியும் வென்றுவிடுவோம் என்று பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. இதனாலேயே இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் டெல்லியில் மகாராஷ்டிரா மாநில பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனித்துப் போட்டியிடுவோம் என்ற பேச்சுக்கே இடம் வேண்டாம்.. பாஜக, சிவசேனா, குடியரசுக் கட்சி உள்ளிட்டவற்றுடன் சிறிய கட்சிகளையும் இணைத்து பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துதான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.
அதாவது காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வியூகம் என்றும் அமித்ஷா கூறியிருக்கிறார். மேலும் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் உடனே முன்னெடுத்து செயல்படுமாறும் பாஜக நிர்வாகிகளை அமித்ஷா கேட்டுக் கொண்டார்.